வேல் யாத்திரை நிறைவு தேதியை டிசம்பர் 7 ஆக மாற்றிய பாஜக - அரசு அனுமதி கிடைக்குமா?
பாஜகவின் வேல் யாத்திரை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு பதில், டிசம்பர் 7 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என்று பாஜக அறிவித்துள்ளது. தேதியை மாத்தினாலும் அரசு அனுமதி கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: பாஜக நடத்தும் வேல் யாத்திரை டிசம்பர் 6ஆம் தேதிக்கு பதில் டிசம்பர் 7ஆம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று அரசு உறுதியாக கூறியுள்ள நிலையில் தேதியை மாற்றியுள்ளது பாஜக, அரசு அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சஷ்டி திதியை மையமாக வைத்து பாஜக வேல் யாத்திரை தொடங்கியது. நவம்பர் 6ஆம் தேதி தேய்பிறை சஷ்டி திதி. டிசம்பர் 6ஆம் தேதி அதே போல தேய்பிறை சஷ்டி திதியாகும். திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூர் வரை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குக்கும் வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது பாஜக.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த அரசு அனுமதி மறுத்தது. பாஜக மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் கடந்த நவம்பர் 6ஆம் தேதி வேல் யாத்திரை தொடங்கியது.

வேல் யாத்திரை தொடரும்
தடையை மீறி பாஜகவினர் ஓரிரண்டு நாட்கள் வேல் யாத்திரை நடத்தி கைது செய்யப்பட்டனர். தீபாவளி விடுமுறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேல் யாத்திரை இன்று முதல் தொடங்கும் என பாஜக தெரிவித்தது. தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும் என்று பாஜக கூறியுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினம்
அதே சமயம் தமிழகத்தில் மத ,சாதி கலாச்சாரத்தைக் கொண்டு வாக்கு வங்கி நிரப்ப பாஜக திட்டமிட்டு வருவதாகவும், டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று வேல் யாத்திரை நிறைவடைவது சமூகத்தில் அமைதியை குலைக்கும் என்றும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

நீதிமன்றம் கண்டனம்
வேல் யாத்திரைக்கு அரசு தடை விதித்ததோடு நவம்பர் 30ஆம் தேதி வரை ஊர்வலங்கள் நடத்த தடை விதித்தது அரசு. இதனிடையே வேல் யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி பாஜக தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது ஆன்மீக யாத்திரையா? அரசியல் யாத்திரையா என்று கேள்வி எழுப்பியது.

கோரிக்கை வைத்த முருகன்
வேல் யாத்திரைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற முதல்வர், துணை முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தும் காரியம் நடக்கவில்லை. பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி வேல் யாத்திரை நிறைவடைய எதிர்ப்பு கிளம்பியதால் பாஜக வேல் யாத்திரை நிறைவு தினத்தை மாற்றியுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி நெல்லையிலும் , டிசம்பர் 7 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் வேல் யாத்திரை நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேதியை மாற்றினால் போதுமா?
வேல் யாத்திரை நடத்தவே அனுமதி கிடையாது என்று தமிழக அரசு கூறி வருகிறது. இந்த நிலையில் நிறைவு நாளை மட்டும் பாஜக மாற்றியுள்ளது. தேதியை மாற்றினால் அரசு அனுமதி கிடைத்து விடுமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications