பாஜக தரப்போகும் ட்விஸ்ட்.. எடப்பாடி என்ன செய்ய போகிறார்.. அண்ணாமலை வேறு இப்படி சொல்றாரே!
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை தங்கள் கூட்டணியில் பாஜக சேர்க்க வாய்ப்பு உள்ளதை மறைமுகமாக அண்ணாமலை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பாத யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த 28-ந் தேதி தொடங்கி உள்ளார். நேற்று 6-வது நாளில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பாத யாத்திரை மேற்கொண்டார்.

திருமயம் பேருந்து நிலையத்தில் செயதியாளர்களிடம் பேசும் போது, " என் மண் என் மக்கள் யாத்திரை மக்களிடையே பெரும் எழுச்சியாக உள்ளது. நல்லதொரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு பிறந்துள்ளது. இந்த யாத்திரை குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனம் மூலம் யாத்திரைக்கான நோக்கம் பூர்த்தி அடைந்துள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகள் செய்ததை இந்த யாத்திரையில் மக்களிடையே எடுத்து கூறி வருகிறோம். அதேபோல தி.மு.க. அரசின் தவறுகளை ஆதாரத்தோடு தெரிவித்தும் வருகிறோம். பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என நாங்கள் யாத்திரையின் போது மக்களிடம் கேட்கிறோம். அனைத்து இடத்திலும் மக்கள் இதை வரவேற்கிறார்கள் என்றார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக தலைவர்கள் அரசியல் கட்சியினரை அழைத்து பேசி வருகிறார்கள். அதிமுக எங்களுடன் அதிகாரபூர்வமாக கூட்டணியில் இருக்கிறது. எங்கள் வேலையை நாங்கள் செய்து வருகிறோம். முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை அழைக்காததால் அவர் விரக்தியில் இருப்பதாக கூறுவது தவறு. பாரதியஜனதா கட்சி யாரையும் ஒதுக்கவில்லை. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறது. யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். வருபவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும். கூட்டணியில் கதவுகள் திறந்து தான் இருக்கின்றன என்றார்.
கொடநாடு குறித்தும் திமுக ஊழல் குறித்தும் பேசிய அண்ணாமலை, தி.மு.க. 2-வது பைல் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது எனறு நம்பிக்கை தெரிவித்தார். கோடநாடு வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் அண்ணாமலை நேற்று பேட்டியின் போது கூறினார்.

அண்ணாமலையின் பேட்டியை பார்க்கும் போது, ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை பாஜக ஏற்கும் என தெரிகிறது. அதேநேரம் டிடிவி தினகரனின் கட்சியில் ஓ பன்னீர்செல்வம் இணைந்தாலோ அல்லது தனி கட்சி ஆரம்பித்தால் தான் அது சாத்தியம் என்றும் அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். அதேநேரம் ஓ பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்ப்பார் என்பதால் இதனை எப்படி பாஜக சமாளிக்க போகிறது என்பது தெரியவில்லை.கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும். டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜக முயற்சித்தது என்று சொல்லப்பட்டது.
ஆனால் கடைசி வரை எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவே இல்லை. இப்போதும் அதேபோல் இருக்கும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். ஆனால் இந்த முறை எதிர்க்கட்சிகள் கூட்டணி கடுமையான சவாலை அளிக்கும் என்று கூறப்படுவதால், தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வெல்ல பாஜக விரும்புகிறது. அதற்காக வியூகத்தின் ஒரு பகுதியாக பாஜக ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை எப்படியாவது அதிமுக பாஜக கூட்டணியில் சேர்க்க விரும்பும் என்றே அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் அதற்கான அறிவிப்புகள் வர அதிக வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications