தமிழ்நாட்டில் 2026-ல் பாஜக ஆட்சியா? இலவு காத்த கிளி போல அண்ணாமலை இருக்க வேண்டியதுதான்.. ஜெயக்குமார்
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று அண்ணாமலை நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "2026 ல் பாஜக ஆட்சி அமையும் என்று இலவு காத்த கிளி போல அண்ணாமலை காத்து இருக்க வேண்டியதுதான்" என்று கூறினார்.
லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறிய அதிமுக அதில் உறுதியாக நின்று தேமுதிகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இதேபோல் பாஜகவும் பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஓ பன்னீர் செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

தேர்தல் பிரசாரத்தின் போது தமிழகத்தில் பாஜக மலரும் என்றும், இங்கிருந்து கட்டாயம் டெல்லிக்கு பாஜக எம்பிக்கள் செல்வார்கள் என்றும் பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். இதேபோல் பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு 8 முறை வந்து பிரசாரம் செய்தார். மொத்தமாக பாஜக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறி வந்தனர்.
இதேபோல் அதிமுகவும் தமிகழம் மற்றும் புதுவையோடு சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் இடத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்றும் அதிமுக தலைவர்கள் பேசி வந்தனர். ஆனால் லோக்சபா தேர்தல் முடிவு இவை அனைத்தையும் பொய்யாக்கியது. தமிழகத்தில் அதிமுக பாஜக இரண்டு கட்சிக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
மொத்தமாக திமுக கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது. தேர்தலுக்கு முன்பு அதிமுக பாஜக மோதல் இருந்து வந்த நிலையில் ரிசல்ட்டுக்கு பிறகும் அதிமுக பாஜக இடையே மோதல் வலுத்து வருகிறது. அண்ணாமலை பேசுகையில், நான் தலைவராக இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்றும், 2026 சட்டசபை தேர்தல் பாஜக கூட்டணி வெற்றி பெறும்" என்று கூறினார்.
இந்த நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், "2026 ல் பாஜக ஆட்சி அமையும் என்று இலவு காத்த கிளி போல அண்ணாமலை காத்து இருக்க வேண்டியதுதான்" என்று கூறினார். ஜெயக்குமார் கூறியதாவது:-
ஓ பன்னீர் செல்வம் என்ன ஓட்டுக்களை அள்ளி குவிச்சிட்டாரா.. டிடிவி அள்ளி குவிச்சிட்டாரா.. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ஃபேக்டர் இருக்கும் அது எடுபட்டுள்ளது. சட்டமன்றத்திற்கு வேறு விதமான அணுகுமுறை. எனவே, கடந்த தேர்தலைவிட அதிகமாக வாங்கியிருக்கிறோம். அப்படி இருக்கும் போது போஸ்டர் அடிப்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிணைவோம் என்ற பேச்சுக்கு இடம் இல்லை.
கட்சி எழுச்சியோடு உள்ளது. 2026-ல் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். அதிமுக அட்சி அமையும். 2026ல் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அண்ணாமலை சொல்வதாக கேட்கிறீர்கள். அண்ணாமலை இலவு காத்த கிளி போல பார்த்துகொண்டே இருக்க வேண்டியதுதான். தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது.. ராமர் கோவில் கட்டிய அயோத்தியிலேயே பாஜக வேட்பாளர் வெற்றி பெறவில்லை. தமிழ்நாட்டில் வெற்றி பெற்று விடுவார்களா என்ன? இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications