"ஆக்ஷன் மோடில்" அண்ணாமலை.. எடப்பாடி படத்தை எரித்து பரபரக்க வைத்த பாஜக நிர்வாகி தற்காலிக நீக்கம்
“கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதால் தினேஷ் ரோடி தற்போது வகித்தும் வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு விலக்கப்படுகிறார்”
சென்னை: அதிமுகவினருக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரொடியை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து உள்ளார் தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன்.
கடந்த வாரம் தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
உடனடியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அவர் அதிமுகவில் இணைவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து பாஜகவை ஐடி விங் மாநில செயலாளர் திலிப் கண்ணன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை மீது குற்றம்சாட்டியில் கட்சியிலிருந்து விலகினர்.

அதிமுகவில் பாஜகவினர் ஐக்கியம்
அவர்களும் நிர்மல் குமார் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இதனால் அதிமுக பாஜக கூட்டணியில் உரசல் ஏற்பட்டு தற்போது விரசலாகி இருக்கிறது. இதனை முதலில் தொடங்கி வைத்தவர் பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவரான அமர்பிரசாத் ரெட்டி.

அமர் பிரசாத் ரெட்டி ட்வீட்
அவர் ட்விட்டரில் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், "அதிமுக கூட்டணியில் இருக்கும்போது இப்படி செய்திருக்க கூடாது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் பாஜகதான். அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.

அதிமுகவுக்கு பாஜக கண்டனம்
அடுத்த பதிவில் "கட்சிக்கே பிரச்னை என்றதும், 'காட்சி கொடுங்கள் ஐயா' என்று ஓடோடி வந்தவர்களெல்லாம் இன்று, அகில உலக தலைவர்களாக காட்டிக் கொள்ள விழைகின்றனர். உதவி செய்தவர்களை துச்சமாக மதிப்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த அரசியல் என்றால், அந்த அரசியல் எங்களுக்கு ஒரு நாளும் வேண்டாம்!" என்று விமர்சித்தார்.

எடப்பாடி படத்தை எரித்த பாஜகவினர்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து அளித்த பேட்டியில், தன்னை அவர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டதாக கூறி செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்தை எரித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணாமலை உருவப்படம் எரிப்பு
இதனை கண்டித்து அரியலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் அண்ணாமலையின் உருவபடத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சில தலைவர்கள் சமாதானம் செய்ய முயன்றாலும் தொடர்ந்து கருத்து மோதல்கள் நீடித்து வருகின்றன.

பாஜக நிர்வாகி தற்காலிக நீக்கம்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரொடி தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்கான காரணத்துடன் தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

6 மாதங்களுக்கு நீக்கம்
அதில், "மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாலும் கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாவட்ட தலைவர் திரு.தினேஷ் ரோடி அவர்கள் தற்போது வகித்தும் வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு விலக்கப்படுகிறார் என்பதை- தொவித்துக் கொளிகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications