சென்னையில் பிஎல் சந்தோஷ்.. அண்ணாமலையை சமாதானம் செய்ய டெல்லி முயற்சி? பரபரக்கும் பாஜக!
சென்னை: தமிழ்நாட்டுக்கு இன்று வருகை தந்துள்ள பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கட்சிக்குள் நிலவும் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அண்ணாமலை தனக்கு வழங்கப்பட்ட தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் பிஎல் சந்தோஷ் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக, தமாகா, அமமுக, தமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் சட்டசபை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க என்டிஏவில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து, ஒருங்கிணைப்புக் கமிட்டி அமைக்க பாஜ மேலிடம் திட்டமிட்டுள்ளது.

பிஎல் சந்தோஷ் சென்னை விசிட்
இதற்காக பாஜவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் இன்று சென்னை வருகை தந்துள்ளார். சென்னை வந்துள்ள அவர் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது கட்சியினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை
5 சட்டசபை தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு, தனது தந்தையின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தை கூறி இருந்தார். ஆனால் அண்ணாமலை, கட்சிக்குள் இருக்கும் அதிருப்தி காரணமாகவே இந்த முடிவை எடுத்தார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
பாஜகவில் நிலவும் சலசலப்பு
அண்ணாமலை, தமது பொறுப்பில் இருந்து விலகியதை தொடர்ந்து தமிழக பாஜகவில் சலசலப்புகள் நீடித்து வரும் நிலையில் அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் இன்று சென்னை வருகை தந்துள்ளார். பாஜக நிர்வாகிகள் உடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது கட்சியினருக்கு சில அறிவுரைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பி.எல்.சந்தோஷ் அண்ணாமலையின் அரசியல் குரு என்று சொல்லப்படுகிறது. கர்நாடகாவில் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய போது இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்தே அண்ணாமலை பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. பிஎல் சந்தோஷ் மூலமாகவே அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் பதவியையும் பெற்றார் என்ற பேச்சு உள்ளது.
அண்ணாமலை சமாதானம்?
இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தல் களத்தில் அண்ணாமலை எடுத்த முடிவால் கட்சிக்கு மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்வதற்கு பி.எல்.சந்தோஷ் முக்கிய கவனம் கொடுப்பார் என்று கூறப்படுகிறது.
தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியில் இருந்து விலகிய அண்ணாமலையை சந்தித்து அவரை சமாதானப்படுத்தவும் பிஎல் சந்தோஷ் முயற்சிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் பிஎல் சந்தோஷின் இந்த தமிழக வருகை கமலாலயத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications