கருப்பை வெள்ளையாக்கிய டாஸ்மாக்! பணமதிப்பிழப்பில் அரங்கேறிய தில்லுமுல்லு! RTI மூலம் அம்பலமான கொள்ளை!
சென்னை : கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகள் மூலம் சுமார் 64 கோடி பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டு வெள்ளை பணமாக மாற்றியதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கவும், மக்களிடம் ரொக்கப் பணப்புழக்கத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கும் விதமாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ரூ.500. ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனாலும், மக்கள் மத்தியில் ரொக்கப் பணப்புழக்கம் குறைந்தபாடில்லை. கருப்பு பணமும் ஒழியவில்லை என கூறப்படுகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை
முன்னதாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கருப்பு பணம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அதனை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். மக்கள் தங்கள் கைகளில் ரொக்கமாக வைத்திருக்கும் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என கூறினார்.

கருப்பு பணம்
ஏடிஎம் வாசல்களில் நாட்கணக்கில் நின்ற சிலர் உயிரிழந்த சம்பவம் கூட தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அரங்கேறியது. ஆனாலும் கருப்பு பணம் மீட்கப்பட்டதா என்றால் இதுவரை இல்லை என்ற பதிலே இருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பெரும்பாலான 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் அவை வங்கிகளில் செலுத்தப்பட்டு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

டாஸ்மாக்
இந்த நிலையில் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மத்திய அரசின் அறிவிப்பின்படி 10.11.2016 ஆம் தேதிக்குள் டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்யப்பட்ட பணத்தை வங்கிகளில் செலுத்தி விட வேண்டும் என்றும் அதன் பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

64 கோடி ரூபாய்
ஆனால் இந்த நடவடிக்கையை மீறி திருவள்ளூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கடலூர் தூத்துக்குடி திருச்சி தேனி ஈரோடு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் டிசம்பர் 31ஆம் தேதி வரை சுமார் 64 கோடி ரூபாய் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட்டதாகவும் இதில் அதிகபட்சம் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 22 கோடி கருப்பு பணம் வசூலிக்கப்பட்டு அவை வங்கிகளில் செலுத்தப்பட்டு வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது.

ஆர்டிஐ மூலம் அம்பலம்
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான காசிமாயன் என்பவர் எழுப்பிய கேள்விக்கு டாஸ்மாக் அனுப்பிய பதில் மூலம் இந்த தில்லுமுல்லு தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் டாஸ்மாக் கருப்பு பணம் மாற்றப்பட்டது குறித்து நீண்ட அலைக்கழிப்புக்கு பிறகு தனக்கு தகவல்கள் கிடைத்ததாகவும் அரசின் விதிமுறைகளை மீறி டாஸ்மாக் மது கடைகளின் மூலமாக மட்டும் பல நூறு கோடி ரூபாய்கள் கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்பட்டு இருக்கிறது என்கிறார்.

மெகா ஊழல்
இந்த ஊழலில் டாஸ்மாக் சில்லறை விற்பனை ஊழியர்கள், மாவட்ட விற்பனை அலுவலர்கள், மண்டல முதுநிலை மேலாளர்கள் என அனைவருமே சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஆனால் இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது, மேலும் 13 மாவட்டங்களில் இதுவரை கருப்பு பணம் நடவடிக்கை குறித்து தகவல்கள் சொல்லவில்லை என கூறப்படுகிறது, ஏற்கனவே 800 கோடி ரூபாய் அளவுக்கு கருப்பு பணம் மாற்றப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications