திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!
சென்னை: திமுகவை குறை கூறுவதால் பிரச்சனைகளை மக்கள் மறந்துவிட மாட்டார்கள் என்று முதல்வர் விஜய்க்கு கனிமொழி பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதா என்பதை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறிய கனிமொழி, ஆட்சிப் பொறுப்பில் தவெக தான் உள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கான நன்றி தெரிவிக்கும் விழாவிலும் கூட முதல்வர் விஜய் திமுகவை குறை கூறி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. தவெக ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் சோசியல் மீடியாவில் மட்டுமே கேள்வி எழுப்பி வந்தனர். இதுதொடர்பாக திருச்சியில் முதல்வர் விஜய் பேசுகையில், தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்று திமுகவும் மற்றும் பலரும் என்னென்ன வேலைகள் செய்தார்கள் என்பதை பார்த்தேன். பதவி போன சோகத்தில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.
திமுக ஆட்சியின் போது ஒரு தெருவிடாமல் போதைப்பொருள் கலாச்சாரம் கொட்டிக் கிடந்தது. இதனை தடுத்திருந்தால், பெண்களுக்கு அநீதி நடந்திருக்குமா? திமுகவின் தோல்விக்கு காரணம் தேடாதீர்கள். உங்கள் வீட்டிலேயே காரணம் இருக்கிறது. உங்கள் வீட்டில் இருப்பவர்களே திமுக தோல்விக்கு காரணம். அதனை திமுக தொண்டர்களே கூறுகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.
தவெக ஆட்சி அமைந்து சுமார் ஒரு மாதமாக இருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் திமுகவை குறை கூறுவது விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக எம்எல்ஏ அலுவலகத்தை கனிமொழி திறந்து வைத்தார். அப்போது விஜய்யின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கனிமொழி, தவெக தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அவர்கள் சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும். அதனை விடுத்து, திமுகவை மட்டுமே குறை சொல்லிக் கொண்டே இருப்பதால், பொதுமக்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எல்லாம் மறந்துவிட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications