உதயநிதியிடம் குறை கூறிய வயதான பெண்! தடுத்து பின்னால் இழுக்கும் அமைச்சர்கள்! ப்ளூ சட்டை மாறன் கண்டனம்
சென்னை: வயதான பெண்மணி தனது குறையை அமைச்சர் உதயநிதியிடம் கூறுவதற்கு முற்பட்டவரை கட்சியினர் தடுப்பதும், அமைச்சர்கள் மா.சு.வும் கே.என்.நேருவும் தடுக்கும் காட்சிகளை கண்டித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பல இடங்களில் தண்ணீர் வடியாத நிலை உள்ளது. பல இடங்களில் படகு போக்குவரத்து வரவில்லை. அப்படியே அரசு கொடுத்த போன் நம்பருக்கு போட்டாலும் உதவிக்கு யாரும் வரவில்லை என மக்கள் குமுறுகிறார்கள்.

வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம், காரப்பாக்கம், பள்ளிக்கரணை, போரூர் மேற்கு தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கழுத்தளவு முதல் 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
48 மணி நேரமாக மின்சாரம் இல்லை, குடிக்க தண்ணீர், பால், உணவு இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். சில இடங்களில் படகு போக்குவரத்துக்கு பணம் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி வெள்ள நிவாரண பணிகளை ஆய்வு செய்கிறார் என்பதை அறிந்த வயதான பெண் ஒருவர் மனு கொடுக்க வருகிறார். அவரை திமுக நிர்வாகிகள் தடுத்து நிறுத்துகிறார்கள்.
அதையும் மீறி அந்த பெண்மணி வந்து உதயநிதியிடம் குறையை சொல்கிறார், அவரை பேச விடாமலும் உதயநித அதை கேட்க விடாமலும் அமைச்சர்கள் மா சுப்பிரமணியனும் கே.என். நேருவும் தடுக்கிறார்கள். இதற்கு கண்டனங்கள் குவிகின்றன.
இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பதாவது: கனமழையால் தான் சந்தித்த இன்னல் குறித்து புகார் அளிக்கிறார் பள்ளி ஆசிரியை ஒருவர். வெறும் வாய்ப்புகாராக மட்டுமின்றி மனுவும் அளிக்கிறார். யாருக்கெல்லாம் போன் செய்து உதவி கேட்டோம் என்றும் ஆதாரமும் தருகிறார்.
அனைத்தையும் பொறுமையாக நின்று கேட்கிறார் உதயநிதி. ஆனால் சிலர் அந்த வயதான பெண்மணியை பின்பக்கமாக இழுக்கிறார்கள். அமைச்சர் மா.சுப்ரமணியம் அவரை உதயநிதியிடம் மேலும் சில நிமிடம் பேச செய்திருக்கலாம். 'என்ன தீர்வு வேண்டும்?' என கேட்கிறார் மா.சு. ஆனால் 'வாம்மா, இரும்மா' என ஒருமையில் அழைத்தது தவறு.
அமைச்சர் நேரு 'அவ்வளவு நேரமெல்லாம் பேச முடியாது' எனக் கூறி நகர்கிறார். அப்பெண்மணி பேசியதே ஒன்றரை நிமிடம்தான். அதை ஏன் தடுக்க பார்க்கிறீர்கள்? அவர் உதயநிதியிடம்தானே பேசுகிறார்? நீங்கள் ஏன் குறுக்கே சென்று இடையூறு செய்கிறீர்கள்?
அவர் இன்னும் சிலநிமிடம் பேசியதும் 'உரிய தீர்வு காண்கிறோம்' என உதயநிதி கூறி, அதை செயலிலும் காட்டியிருந்தால்.. குறைந்தபட்ச நற்செயலாக இருந்திருக்கும். இனி இப்படியான நிகழ்வு. தன்னை சுற்றியுள்ள கட்சியினரால் நடக்கவிடாமல் உதயநிதி தடுத்தாக வேண்டும். இந்த ஆசிரியையை பின்பக்கமாக இழுத்த நபர்களையும் கண்டிக்க வேண்டும். இவ்வாறு ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications