சென்னையில் ஷாக்.. பிஎம்டபிள்யூ கார் மோதி இளைஞர் பலி! உடல் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட கோரம்!
சென்னை: சென்னையில் பிஎம்டபிள்யூ சொகுசு கார் மோதிய விபத்தில் தெலுங்கு சேனலில் கேமராமேனாக பணியாற்றி வரும் இளைஞர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் மோதிய வேகத்தில் அந்த ஊழியர் சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் மிகப் பரபரப்பான மதுரவாயல் தாம்பரம் பைபாஸ் சாலையில் இன்று அதிகாலையில், சென்னை பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

பிரபல தெலுங்கு சேனலில் கேமராமேனாக பணியாற்றி வரும் இவர், பார்ட் டைமாக ரேபிடோ பைக் ஓட்டி வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் பிரதீப் குமார் வாடிக்கையாளர் ஒருவரை சந்திப்பதற்காக அந்த சாலையில் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் பிரதீப் குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட பிரதீப் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மோதிய வேகத்தில் காரும் பலத்த சேதம் அடைந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் பெரிய சத்தம் கேட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் திரண்டனர். இரு சக்கர வாகனமும் கார் மட்டும் இருந்த நிலையில் வேறு யாரையும் காணாததால் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து அங்கு வந்த போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் பிரதீப் குமாரின் சடலம் புதருக்குள் இருந்து மீட்கப்பட்டது. இதை எடுத்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காரின் ஓட்டுநர் தப்பி சென்ற அளவில் அவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாலை நேரம் என்பதால் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பிஎம்டபிள்யூ காரில் வந்தவர் அதிவேகமாக வந்ததாகவும் சாலையோரமாக சென்ற பிரதீப் குமாரை மோதி தூக்கி வீசிவிட்டு சிறிது தூரத்தில் கார் நின்றதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் காரின் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே சென்னையில் சொகுசு கார் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தியாகராய நகர் பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி நான்கு பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications