உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுவை ஹேமசந்திரன் மரணம்! பம்மல் தனியார் மருத்துவமனை இயங்க தடை
சென்னை: உடல் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்த இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனையை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற இளைஞர், சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் (பி.பி. ஜெயின் மருத்துவமனை), உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் 23 ம் தேதி அறுவை சிகிச்சை நடந்த நிலையில், மறுநாளே ஹேமச்சந்திரன் மரணமடைந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மருத்துவமனையை ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர், மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்து மே 4 ம்தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், நோயாளியிடம் முன் அனுமதி பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும், மருத்துவமனையிடம் விளக்கம் கேட்காமல் பதிவை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, அதனை ரத்து செய்து, மருத்துவமனை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்து கடந்த மே மாதம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத்தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முறையான கவனம் இல்லாமல், அஜாக்கிரதையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இளைஞர் மரணமடைந்ததாகவும், இந்த விவரங்களை விளக்கி பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தனியார் மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.












Click it and Unblock the Notifications