கொதிக்கும் சாலைகள்..102 டிகிரி பாரன்ஹீட்..தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்.. வரப்போகுது ரெஸ்ட்
சென்னை: சாலைகள் தகிக்கின்றன..சுட்டெரிக்கும் வெயிலில் ஆம்லேட் போடலாம் போல அக்னி சுட்டெரிக்கிறது. முதன்முறையாக ஈரோட்டில் நேற்று 102 டிகிரியும், கரூர், பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் 100 டிகிரி அளவில் வெயில் நிலவியது. கோவை, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், வேலூர், மதுரை மாவட்டங்களில் 97 டிகிரி வெயில் நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பங்குனி மாத வெயில் பாதம் பொத்துப்போகும் அளவிற்கு சுட்டெரிக்கிறது. அனலை தணிக்க ஆங்காங்கே மழை பெய்து குளிர்வித்தாலும் பல ஊர்களில் வெயில் சதமடித்துள்ளது. இந்த மாதத்தில் பெரும்பாலும் ஈரோட்டில் தான் அதிக அளவில் வெப்பம் பதிவானது. மேற்கு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வீட்டு குழாய்களில் இருந்து சுடுதண்ணீர் விழுகிறது. புழுக்கமும் வியர்வையும் அதிகரிப்பதால் ஏசி, மின்விசிறிகளின் தேவையும் அதிகரிக்கிறது. கோடை மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று புலம்ப ஆரம்பித்து விட்டனர் பொதுமக்கள்.

ஈரோட்டில் 102 டிகிரி பாரன்ஹீட்
இந்நிலையில், முதன்முறையாக ஈரோட்டில் நேற்று 102 டிகிரியும், கரூர், பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் 100 டிகிரி அளவில் வெயில் நிலவியது. இதன் காரணமாக, இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் கூடுலாக வெப்பம் நிலவியது. கோவை, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், வேலூர், மதுரை மாவட்டங்களில் 97 டிகிரி வெயில் நிலவியது.

சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 100 டிகிரி முதல் 102 டிகிரி வரையில் வெப்பம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தஞ்சாவூர், சென்னை, கடலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், கோவை, வேலூர், மதுரை மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையே, வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக சில இடங்களில் லேசான மழை பெய்தது.

வெயிலோடு மழையும்
அதில் அதிகபட்சமாக பேரையூர், காரியகோயில் அணை 30 மிமீ மழை பதிவாகியுள்ளது. சங்கரன்கோவில், பாப்பாரப்பட்டி 20 மிமீ, மாரண்டஹள்ளி, சூலூர், சின்னகல்லார், ஏற்காடு, பொள்ளாச்சி, கீரனூர் 10மிமீ மழை பெய்துள்ளது. இதையடுத்து, 30ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழை பெய்ய வாய்ப்பு
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 27 மற்றும் 28ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வெயில் சுடும்
29.03.2023 முதல் 31.03.2023 வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications