கிண்டி ஆளுநர் மாளிகையில் காலையிலேயே பரபரப்பு! அக்டோபரில் மட்டும் 4 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 4 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பெற்றோர் பதறி போய் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பள்ளிகளுக்கு படையெடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சோதனையில் அது புரளி என தெரியவந்தது.

இந்த நிலையில் கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு நிறைய இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை சோதனை செய்ததில் புரளி என தெரியவந்தது. எனினும் இமெயில் அனுப்பிய நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
அது போல் அண்மையில் பாஜக முன்னாள் நிர்வாகி எஸ்.வி.சேகரின் வீட்டிற்கு 4 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் வீடு, த்ரிஷா வீட்டிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து சோதனை நடத்தப்பட்டது. இதிலும் புரளி என தெரியவந்தது.
பின்னர் நடிகை சுவர்ணமால்யா வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. தற்போது ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மெயிலில் வந்த தகவலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஆளுநர் மாளிகைக்கு 4 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications