சென்னை-துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை! பல மணி நேர தாமதத்தால் பயணிகள் தவிப்பு
சென்னை: சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனால் துபாய் செல்லும் பயணிகள் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள், கோயில்கள், விமான நிலையம் என பொதுமக்கள் கூடும் இடங்களில் எல்லாம் வெடிகுண்டு மிரட்டல்கள் சமீப காலமாக அதிகமாக வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் இடங்களுக்கு உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் சென்று சோதனை செய்கிறார்கள்.

சோதனையில் மிரட்டல் என்பது வெறும் புரளி என தெரியவருகிறது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்திற்கு கடந்த இரு வாரங்களாக வெடிகுண்டு மிரட்டல் 5 முறை வந்துள்ளது. இந்த நிலையில் இன்று 6 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து புறப்பட தயாராகி வந்த விமானம் நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏற்றப்பட்ட பயணிகளின் லக்கேஜ்கள் இறக்கி வைக்கப்பட்டு அங்குலம் அங்குலமாக சோதனை நடைபெற்றது. பயணிகளும் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட்டனர். இதையடுத்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் இன்று இரவு 11 மணியளவில் புறப்படும் என்று விமான நிறுவனம் அறிவித்தது.
இதையடுத்து பயணிகள் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பயணிகள் அனைவரும் விமான நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். துருக்கியில் உள்ள இஸ்தான்புலில் இருந்து விமானத்திற்கு மிரட்டல் வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று நள்ளிரவு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு நள்ளிரவில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து புகாரின் பேரில் வெடிகுண்டை செயலழிக்க வைக்கும் நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் வந்து சோதனை செய்தனர். அப்போது அந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இதுபற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, இதுபோன்ற வெடிகுண்டு புரளிகள் தொடர்ச்சியாக வருகிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சோதனைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது" என்றனர். சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து இருப்பது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications