ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல்.. பரபர சோதனை!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சென்னை ஈசிஆர் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில், விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

விஜய் வீட்டில் வெடிகுண்டு சோதனை
இது குறித்து தகவல் அறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து அது புரளி என தெரியவந்தது.
முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழக்கம் போல கடந்த 21 ஆம் தேதி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் குழுவினர் அறிவுறுத்தினர்.
இதனால் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பயணங்கள், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர், அங்கிருந்தபடியே அலுவல்களை மேற்கொண்டு வருகிறார். அதோடு முக்கிய கோப்புகளைப் பார்வையிட்டு ஒப்புதல் அளித்தும் வருகிறார்.
ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலினின் வீட்டில் காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையில் எந்த சந்தேகத்திற்குரிய பொருளும் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. செல்போன் எண்ணை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications