சென்னையில் பிளஸ்-2 தேர்வில் தோல்வியால் காதலன் தற்கொலை.. உடனே விபரீத முடிவெடுத்த பிளஸ்-1 மாணவி
சென்னை: சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் பிளஸ்-2 தேர்வில் காதலன் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். அந்த விரக்தியில் பிளஸ்-1 மாணவியும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் செம்பரம்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், கற்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டில்லி. ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகள் நந்தினி (வயது 16). இவர், பூந்தமல்லியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த மாணவி நந்தினி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்து நசரத்பேட்டை போலீசார் நேரில் சென்றனர். அங்கு நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆவடி கோவர்த்தனகிரி, பாரதி நகர், 1-வது தெருவைச் சேர்ந்த தேவா (17) என்பவர், பிளஸ்-2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை மாணவி நந்தினி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் தனது காதலன் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்த நந்தினி, அந்த விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை செய்யும் மனநிலை வந்தால் உடனே அரசின் 104 என்ற எண்ணிக்கு அழையுங்கள். அல்லது சினேகா தற்கொலை தடுப்பு மையத்தினை தொலைப்பேசி எண்ணான 044 -24640050க்கு அழைக்கலாம்.












Click it and Unblock the Notifications