அண்ணா நினைவுநாள்.. சென்னையில் திமுக மாபெரும் அமைதிப் பேரணி.. ஸ்டாலின் அஞ்சலி!
அண்ணா நினைவு நாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி திமுகவினர் அமைதி பேரணி நடத்தினார்கள்.
சென்னை: அண்ணா நினைவு நாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி திமுகவினர் அமைதி பேரணி நடத்தினார்கள்.
திமுக கட்சியின் நிறுவனரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அண்ணா, தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர். திமுகவினர் மட்டுமில்லாமல் பல கட்சியினருக்கும் இவர் விருப்பமான தலைவர்.
இந்த நிலையில் எல்லா வருடமும் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் ஆங்காங்கே விழாக்கள் நடப்பது வழக்கம். இன்று அண்ணாவின் நினைவு நாள் என்பதால் திமுக சார்பில் சென்னையில் பெரிய பேரணி நடைபெற்றது.
50வது நினைவுநாள்
அண்ணாவின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திமுக சார்பில் அமைதி பேரணி நடக்கும் என சென்னை மாவட்ட திமுக சார்பில் சென்ற வாரமே அறிவிக்கபட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த பேரணி நடக்கும் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை 7.30 மணிக்கு இந்த பேரணி தொடங்கியது.
நடந்தது
இந்த அமைதிப் பேரணி சென்னை வாலாஜாவில் உள்ள சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தொடங்கியது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய பேரணி 9.00 மணிக்கு முடிந்தது. அண்ணா நினைவிடம் வரை இந்த அமைதிப் பேரணி நடைபெற்றது.
யார் எல்லாம்
இந்த அமைதி பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், டி.ஆர் பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுகவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். ஸ்டாலின் இந்த பேரணியை வழி நடத்தி சென்றார்.
திமுக தொண்டர்கள்
திமுக தொண்டர்கள் பலர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இந்த பேரணியில் நடந்து வந்தனர். அண்ணாவின் புகழ்பாடும் பல கட் அவுட்களை கையில் ஏந்தியபடி இவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
ஸ்டாலின் அஞ்சலி
பேரணியின் முடிவில் ஸ்டாலின் அண்ணாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து திமுக தலைவர்கள் அண்ணாவிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். வரிசையாக தற்போது அங்கு திமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.