ஜெ. பாணி... சி.வி.சண்முகத்துக்கு டிக்கெட்! மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக
சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட உள்ள 2 வேட்பாளர்களை அதிமுக அறிவித்து இருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.
திமுக ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், அதிமுகவில் தொடர்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இபிஎஸ், ஒபிஎஸ் தரப்புக்கு இடையே இழுபறி நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.
அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீங்க எந்த ஊரு!
தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் பெற்றுத்தர இரு தலைவர்களும் போட்டியிட்டதால் வேட்பாளர்கள் தேர்வு தாமதமானதாக பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அதிமுக அறிவித்து இருக்கிறது.
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அறிக்கை
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 10.6.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது சம்பந்தமாக 19.5.2022 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கழக மூத்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இவர்கள்தான் வேட்பாளர்கள்
அதில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை, கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலனை செய்து எடுத்த முடிவின்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அதிமுக வழிகாட்டுக் குழு உறுப்பினரும் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளரும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளருமான ஆர்.தர்மர் ஆகியோர் நிறுத்தப்படுகிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
சி.வி.சண்முகம்
இதில் முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த சி.வி.சண்முகம் 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர். தற்போது எந்த அரசு பதவிகளிலும் இவர் இல்லாத நிலையில், வைத்திலிங்கத்துக்கு முன்பு வழங்கப்பட்டதைபோல் தற்போது சி.வி.சண்முகத்துக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது அதிமுக.
ஆர்.தர்மர்
மற்றொரு வேட்பாளரான ஆர்.தர்மர் தென் மாவட்டமான ராமநாதபுரத்தை சேர்ந்தவர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவுடன் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்பு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து இருந்தாலும் தற்போது ஒன்றிய பொறுப்பில் மட்டுமே இருக்கிறார். அதிமுகவில் அதிகம் அறிமுகம் இல்லாத தர்மரை தற்போது இத்தேர்தலில் களமிறக்கியதன் மூலம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணி அரசியலை இதில் இபிஎஸ், ஓபிஎஸ் கையில் எடுத்திருப்பது தெரிகிறது.