தோல்விக்குப் பிறகு அண்ணா அறிவாலயம் வந்த ஸ்டாலின்.. “வாழிய வாழிய வாழியவே” என கோஷம் போட்ட தொண்டர்கள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். "வாழிய வாழிய வாழியவே" என முழக்கமிட்டு திமுக தொண்டர்கள் அவரை வரவேற்றுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் ரிசல்ட் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் ஸ்டாலின்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், காலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோது முதலில் திமுக முன்னிலையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் வாக்கு பெட்டியில் பதிவான வாக்குகளை எண்ணத் தொடங்கியதும் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.

படிப்படியாக தவெக முன்னிலை பெற்ற நிலையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினும் தபால் வாக்குகளை எண்ணியபோது மட்டுமே முன்னிலையில் இருந்த நிலையில், அதன்பின்னர் பின்தங்கினார்.
தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளிலும் ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்த நிலையில், இறுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியை தழுவியுள்ளார். கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தவெகவுக்கு எழுந்த ஆதரவு அலையில் மு.க.ஸ்டாலின் 4,718 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோல்வியை சந்தித்துள்ளார். கருணாநிதி மறைவிற்குப் பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று வந்தார். தற்போது முதல் முறையாக தற்போது 2026 சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்துள்ளது.
தேர்தல் முடிவுகளில் திமுக பெரும் பின்னடைவைச் சந்தித்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்த திமுக தலைவர் ஸ்டாலினை, "வாழ்க வாழ்க வாழ்கவே முதல்வர் ஸ்டாலின் வாழ்கவே" என முழக்கமிட்டு வரவேற்றனர்.
அண்மைக்காலமாக மூக்கு கண்ணாடி அணிந்து வலம் வரும் ஸ்டாலின், இன்று அண்ணா அறிவாலயம் வந்தபோது கண்ணாடி இல்லாமல் வருகை தந்தார். அறிவாலயத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications