CAG Report: அதிமுக ஆட்சியில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. ரூ 14 ஆயிரம் கோடி நஷ்டம்!
சென்னை: அதிமுக ஆட்சியில் 2013-ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ 14 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு தணிக்கை (சிஏஜி) அறிக்கை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிஏஜி (இந்திய கணக்காய்வு அறிக்கை) அறிக்கை இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் அதிமுக ஆட்சியில் 2013-ஆம் ஆண்டு 2018ஆம் ஆண்டு வரை கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ 14 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சிஏஜி ரிப்போர்ட்.. எதிர்பார்த்ததைவிட மோசம்.. சட்டசபையில் அதிமுகவை வெளுத்து வாங்கிய பிடிஆர்
தாமதங்கள்
மத்திய மின் உற்பத்தி திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக டான்ஜெட்கோவுக்கு கூடுதல் செலவாக ரூ 2,381.54 கோடி ஏற்பட்டுள்ளது. உரிய காலத்தில் திட்டம் நிறைவேறாததால் பற்றாக்குறையை சமாளிக்க மின்சாரம் வாங்கியதில் கூடுதல் செலவு ரூ 2,099.48 கோடி ஏற்பட்டுள்ளது.
மின் உற்பத்தி
தகுதி அடிப்படையில் கடை நிலையில் இருந்த மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ 493.74 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. குறைந்த விலையில் பெற வேண்டிய மின்சாரத்தை பெறாமல் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் டான்ஜெட்கோவுக்கு ரூ 349.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கொள்முதல்
ஒப்பந்தபடி செயல்படாத நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் ரூ 712 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்துக்கு வந்து சேராத மின்சாரத்திற்கு பணம் கொடுத்த வகையில் ரூ 242.9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
டான்ஜெட்கோ
ஒப்புக் கொண்ட அளவில் மின்சாரத்தை வாங்காததால் டான்ஜெட்கோ கூடுதலாக அளித்த தொகை ரூ 122.8 கோடியாக உள்ளது. மின் கொள்முதல் ஒப்பந்தங்களை முறையாக புதுப்பிக்காதால் ஏற்பட்ட நஷ்டம ரூ 39.48 கோடியாகும்.
மின்சாரம்
வெளிமாநிலங்களில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தை பெறாமல் உள்ளூரில் மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ 1,055.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தபடி செயல்படாத நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் ரூ 712 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
குறுகிய கால ஒப்பந்தம்
சூரிய ஒளி மின்திட்டங்களை தொடங்காத நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தால் டான்ஜெட்கோவுக்கு ரூ 605.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட கால ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு குறுகிய கால ஒப்பந்தம் செய்ததால் ரூ 93.4 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
டான்ஜெட்கோவுக்கு நஷ்டம்
2015- 2018 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் அதிக விலையில் மின்சாரம் வாங்கியதால் டான்ஜெட்கோவுக்கு நஷ்டம் ரூ 544.44 கோடியாகும். சந்தை விலையில் ரூ 5.42, ரூ 3.39 க்கு வாங்க வேண்டிய மின்சாரத்தை ரூ 12 க்குஅதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. 3 ரூபாய் மின்சாரத்தை ரூ 5.50 க்கு முறைகேடாக வாங்கியதில் ரூ 1687 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நிகழ்ந்துள்ளது சிஏஜி அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.