தவறிழைக்கும் வழக்கறிஞர்கள் மீது.. புகார் இல்லாமலே ஆக்ஷன்.. முடியுமா?. பார் கவுன்சிலில் கேட்ட நீதிபதி
சென்னை: ''தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது புகார்கள் இல்லாமலேயே தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியுமா'' என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தவறு செய்யும் வழக்கறிஞர்களை நீதிமன்றம் காப்பாற்றும் என்று மக்கள் நினைக்கின்றனர். இது வேதனை அளிக்கிறது'' என்றும் நீதிமன்றம் கூறியது.
சென்னை சேத்துபட்டு சிக்னலில் போலீசாருடன் வழக்கறிஞர் தனுஜா ராஜன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ''உன் யூனிபார்மை கழட்டிடுவேன்'' என்றும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு பேசிய வழக்கறிஞர் தனுஜா ராஜனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தலைமை காவலர் ரஜித் குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்கறிஞர் தனுஜா ராஜன், அவர்களது மகள் ப்ரீத்தி ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜாமீன் மனு தள்ளுபடி
இதனை தொடர்ந்து தாய் தனுஜா,மகள் ப்ரீத்தி இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அங்கு அவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பின்னர் அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி விசாரித்தார்.

அறிக்கை தாக்கல்
''வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?'' என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு-புதுச்சேரி பார் பார் கவுன்சில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வேதனை அளிக்கிறது
வழக்கை விசாரித்த நீதிபதி '' தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது புகார்கள் இல்லாமலேயே தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியுமா'' என பார் கவுன்சிலிடம் கேள்வி எழுப்பினார் .இது தொடர்பாக என்ன நடைமுறை உள்ளது? என்பது குறித்தும் நீதிபதி கேட்டறிந்தார். தொடர்ந்து பேசிய நீதிபதி '' தவறு செய்யும் வழக்கறிஞர்களை நீதிமன்றம் காப்பாற்றும் என்று மக்கள் நினைக்கின்றனர். இது வேதனை அளிக்கிறது.

நாளை விரிவான உத்தரவு
வழக்கறிஞர் தொழில் ஒரு உன்னதமான தொழில். வழக்கறிஞர்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் பரப்பப்படுகின்றன என்று நீதிபதி கூறினார். தெரிவித்தார். இந்த வழக்கில் நாளை விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications