திமுகவில் சரத்குமார்? ராதிகா வேற அப்படி பேசனாங்களே.. அதிமுக உறவை முறித்த கையோடு.. சமக திடீர் முடிவு
சென்னை: திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைக்க போகிறதோ? என்ற சந்தேகம் அரசியல் களத்தில் எழுந்தபடியே உள்ளது.. இந்நிலையில், தன்னுடைய கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியிருக்கிறார் சமக தலைவர் சரத்குமார்.
கடந்த மார்ச் மாதம், திமுக சார்பில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், மகளிர்தின விழா நடைபெற்றது. இந்த விழாவில், நடிகை ராதிகா சரத்குமார் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது ராதிகா பேசும்போது, "மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் செல்ல மகளாக இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறேன். அவரிடம் நான் பயிற்சி பெற்றது இப்போதும் எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் இன்னும் அவரின் குடும்பத்தில் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். அதுபோல் என் அப்பா எம்ஆர் ராதா மற்றும் கலைஞர் கருணாநிதி இருவரின் நட்பு அற்புதமானது என்று பேசியிருந்தார்.
அரசியல்வாதிகள்: சமத்துவ மக்கள் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் பிரபல நடிகை ராதிகா.. இந்த விழாவில் பங்கேற்றிருந்தது, பலரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.. இது ஒரு மகளிர் விழா என்பதால் ஒரு பிரபல நடிகையாக, சக அரசியல்வாதியாக ராதிகா கலந்து கொண்டதாக தெரிகிறது.. ஆனால், மேடையில் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்தும் புகழ்ந்து பேசியிருந்த நிலையில், சமக அடுத்து யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பையும் அப்போது ஏற்படுத்தியிருந்தது.
அதுமட்டுமல்ல, இங்கு இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. கட்சி தொடங்கியது முதல் பெரும்பாலும் அதிமுக கூட்டணியிலேயே பயணித்து வந்த சரத்குமார், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதுதான் அங்கிருந்து வெளியேறினார். இதற்கு பிறகு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிடம் இருந்து மறுபடியும் அழைப்பு வரும் என்று எதிர்பார்த்த சரத்குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக கூறப்பட்டது..
அதிமுக கூட்டணி: இதனிடையே தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான், தனித்தே தேர்தலை சந்திப்பது என்றும் முடிவெடுத்தாராம். இதற்கு பிறகுதான், அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகிவிட்டதாக சரத்குமார் அறிவித்திருந்தார். இப்போது, விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், சமகவின் கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்பை அவரது தொண்டர்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
சில நாட்களுக்கு முன்புகூட, சமக தலைவர் சரத்குமார் ஒரு பேட்டி தந்திருந்தார். அந்த பேட்டியில், "எம்பி தேர்தலைவிட சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் சமத்துவ மக்கள் கட்சி பணியாற்றி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தலிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட விரும்புகிறது. அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை" என்றார்.
அதிமுக கூட்டணி: அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று மீண்டும் ஒருமுறை சரத்குமார் உறுதியாக சொன்னதால், திமுகவுடன் இந்த முறை கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதோ? என்ற சந்தேகம் எழுந்தது.. அதற்கேற்றவாறு, திமுகவையும் சரத்குமார் அவ்வளவாக விமர்சிக்காமலும் வருவதால், கூட்டணி குறித்த சந்தேகம் வலுவாகி கொண்டே வந்தது.
இன்னொருபக்கம், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டதால், சமகவில் உள்ள ஒருதரப்பினர் அதிர்ச்சி அடைந்து, அதிமுகவில் இணைந்துவிட்டனர்.. புதுச்சேரியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில செயலாளர், துணை செயலாளர், அவைத்தலைவர் உட்பட சமகவை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணைந்து, ஷாக் தந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், தன்னுடைய கூட்டணி நிலைப்பாடு குறித்து சரத்குமார் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார்.. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் சரத்குமார் தலைமை வகித்து பேசியதாவது:
சரத்குமார்: "16 வருஷமா இந்த இயக்கத்தை நடத்தியிருக்கிறோம். சமத்துவம் இருந்தால் மட்டுமே இந்த நாடும் முன்னேறும், நாமும் முன்னேறுவோம் என்ற அடிப்படையில் தான் சமத்துவ மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது.
2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கஷ்டமோ, நஷ்டமோ சமத்துவ மக்கள் கட்சி தனியாக போட்டியிட வேண்டும்... மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்... நாம் தீட்டுகிற திட்டங்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கில் அரசியலுக்கு நான் வரவில்லை. வாக்களிக்க மக்கள் பணம் வாங்கக் கூடாது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா? என்பதை ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும். 1967 வரை நாடாளுமன்றத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் ஒன்றாகத்தான் நடந்து வந்தது. இதன் பிறகு ஆட்சிகளை கலைக்கலாம் என்று எப்போது மத்திய அரசு முடிவு செய்ததோ, அன்றுமுதல் தேர்தல் மாறி மாறி வருகிறது" என்றார்
ஆக, தனித்து போட்டி என்பதில் சமக உறுதியாக உள்ள நிலையில், சரத்குமாரின் அரசியல் ஆட்டம் இனிதான் ஆரம்பமாக போவதாக கூறப்படுகிறது. இது நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட சமகவினருக்கு பெருமகிழ்ச்சியையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications