சென்னையை 100 சதவீதம் வெள்ளம் இல்லாத நகரமாக மாற்ற முடியாது! நிபுணர் பதிவு
சென்னை: சென்னையை 100% வெள்ளம் இல்லாத நகரமாக மாற்றிவிடலாம் என்று யாராவது நினைத்தால், அது இன்ஜினியரிங் அல்ல, வெறும் கனவு என்று சொல்ல விரும்புகிறேன் என்று வெள்ள பாதிப்பு குறித்து எக்ஸ் தளத்தில் tamil nadu flood modellers என்ற பெயரில் உள்ள நிபுணர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவினை விவரமாக பார்ப்போம். சென்னையை 100% வெள்ளம் இல்லாத நகரமாக மாற்றிவிடலாம் என்று யாராவது நினைத்தால், அது இன்ஜினியரிங் அல்ல, வெறும் கனவு என்று சொல்ல விரும்புகிறேன்.

நம் சென்னையைப் போன்ற நகரத்தின் நீரோட்டத்தைப் பூரணமாகக் கையாள, மழைநீர் வடிகால்கள் குறைந்தது 3 முதல் 5 மீட்டர் அகலமும், ஆறுகள் 300 மீட்டருக்கும் மேல் அகலமும், 3 மீட்டருக்கும் மேல் ஆழமும் கொண்டதாக இருக்க வேண்டும். இன்றைய சென்னையில் அதற்கு எங்கே இடம் இருக்கிறது? கூகுள் மேப்பே சிரிக்கும்!
மழைநீர் வடிகால்கள் ஒன்றும் வெள்ளத்தை மாயமாக மறையச் செய்யும் மந்திரக் கம்பளங்கள் அல்ல. அவற்றின் வேலை மிகவும் எளிமையானதுதான்.. வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைப்பது. கனமழை நின்றவுடன், தேங்கியிருக்கும் நீரை வேகமாக வெளியேற்றுவது. திடீரென ஏற்படும் மேகவெடிப்பு போன்ற தீவிரமான மழைப்பொழிவுகளின்போதும், நீடித்த கனமழை பெய்யும்போதும், நகர்ப்புறங்களில் வெள்ளப்பெருக்கு என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், சரியான வடிகால் வசதிகள் இருந்தால், நீர் தேக்கம் நீண்ட நேரம் நீடிக்காது. இதனால் சேதத்தின் அளவும் வெகுவாகக் குறையும்.
இயற்கை அதன் பலத்தைக் காட்டும். நகரின் வடிகால் அமைப்பின் வேலை என்னவென்றால், அந்த நீரை விரைவாக வெளியேற்றி, இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதுதான். இந்த நிதர்சனத்தை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்" இவ்வாறு வெள்ள பாதிப்பு தொடர்பாக அந்த நிபுணர் தனது பதிவில் கூறியுள்ளார்.
எதார்த்தம் என்ன
சென்னை என்பது மூன்று ஆறுகள் சந்திக்கும் இடம். பல ஏரிகள் இயற்கையாகவே அமைந்துள்ள இடம். ஒரே நேரத்தில் சென்னைக்கு பொறுத்த வரை அதிகபட்சம் 20 cm மழையை தாங்கும் அளவிற்கு வடிகால்கள் அமைப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மாநகருக்குள் இரண்டு இடங்களில் மட்டுமே மொத்தமாக வெள்ளநீர் கடலில் சேருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. கூவம் ஆற்றிலும், அடையாறு கரையிலும் கடலில் கலக்கிறது. அதை விட்டால் சென்னைக்கு வெளியே கோவளம் அருகே தென் சென்னை வெள்ளம் கடலில் கலக்கின்றன.
பள்ளிக்கரணை ஏரியிலிருந்து ஒக்கியம் மடுகு வழியாக அவை கடலில் சென்று சேருகின்றன. கடலில் கலக்கும் இந்த மூன்று இடங்களிலுமே என்ன சிக்கல் என்றால் கடல் அலை பொதுவாக மழைக்காலங்களில் அதிகமாக இருக்கும். கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் போது வெள்ள நீரை விரைவாக உள்வாங்குவது இல்லை. இதுதான் 2023 ஆம் ஆண்டு வெள்ள பாதிப்புக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது. 2015 ஆம் ஆண்டிலும் அடையாறு ஆற்றில் இதே பிரச்சனை தான் இருந்தது. மிகப்பெரிய அளவில் மழை பெய்து அசுரத்தனமான வெள்ளம் பாய்ந்து ஓடும்போது எந்த வடிவில் அமைப்புகளாலும் தாங்க இயலாது.

இது கேள்வி எழுப்ப வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்.. வெள்ளம் விரைவாக வடியும் அளவிற்கு நமது வடிகால் அமைப்புகள் பலமாக இருக்க வேண்டும். வெள்ள வடிகால்கள் மற்றும் ஏற்கனவே உள்ள நீர்வழிப்பாதைகள் எந்த வழியிலும் ஆக்கிரமிக்கப்படாமல் அதனை பாதுகாக்க வேண்டும். இருக்கும் வெள்ள வடிகால் அமைப்புகளை மிகவும் சிறப்பாக கையாள வேண்டும். சாக்கடைகளும் குப்பைகளும் தேங்காமல் மழை நீர் வடிகால்கள் மற்றும் சாக்கடை கால்வாய்களை பராமரிக்க வேண்டும். இவற்றில் சிக்கல் ஏற்பட்டால்தான் இன்னும் நிலைமை மோசமாகிறது. இந்த சிக்கல்களை நாம் புரிந்து கொண்டால் சென்னை வெள்ள பாதிப்பை ஓரளவு ஒவ்வொரு ஆண்டும் நம்மால் சமாளிக்க முடியும்.












Click it and Unblock the Notifications