பாஜகவில் திடீர் டுவிஸ்ட்.. விக்கிரவாண்டி திமுகவை சாய்க்க போவது இவங்களா.. பரபரக்கும் பாமக
சென்னை: லோக்சபா தேர்தலில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை பாஜக தக்க வைத்திருக்கிறதென்றால், அதற்கு பிரதான காரணம் கூட்டணி கட்சிகள்தான். ஆனால், இப்போது அந்த கூட்டணிகளாலேயே பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. என்ன நடக்கிறது பாஜக கூட்டணியில்?
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்துவிட்டார்.. எனவே, விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது..

திமுக அறிவிப்பு: எனவே, திமுக விவசாய தொழிலாளர் அணிச்செயலாளர் அன்னியூர் சிவா என்பவரை விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக திமுக அறிவித்திருக்கிறது.. இதையடுத்து மற்ற கட்சிகளும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவெடுத்து வருகிறார்கள்.
அந்தவகையில், அதிமுகவும் வேட்பாளரை அறிவிக்க போவதாக சொல்கிறார்கள்.. ஆனால் இதுவரை அதிமுக தரப்பிலிருந்து பெரிதாக ஆர்வம் காட்டப்படவில்லை.
இத்தனைக்கும் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பிரிக்கப்பட்டதிலிருந்து திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வென்றிருக்கின்றன.. ஆனால், கடந்த சில வருடங்களாகவே, அனைத்து தேர்தல்களிலும் அதிமுக மண்ணை கவ்வி கொண்டிருக்கிறது.. எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட போகிறதா? இல்லையா? என்பதே இன்னும் உறுதியாக தெரியவில்லை..
அதிமுக: ஆனால், ஏசாலம் பன்னீர், முன்னாள் விக்கிரவாண்டி எம்எல்ஏ முத்தமிழ்செல்வன் போன்றோர் சீட்டு கேட்டு வருகிறார்களாம்.. எனவே தொடர் தோல்விக்கு ஆளாகியிருக்கும் அதிமுக, மிகப்பெரிய அளவில் வியூகம் அமைத்தால் மட்டுமே இங்கு மீண்டும் தலைதூக்க முடியும் என்பதால், ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
அதேபோல, நாம் தமிழர் கட்சி, இந்த தேர்தலையும் விடுவதாக இல்லை.. விக்கிரவாண்டியில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது.. ஆனால், இன்னும் சின்னம்தான் முடிவாகவில்லையாம். கைவிட்டு நழுவி சென்ற கரும்பு சின்னத்தில் போட்டியிடுவதா? அல்லது மைக் சின்னத்திலேயே போட்டியிடுவதா? இவைகளில் எதை கேட்டு பெறுவது என்ற குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.
அதிமுக ரெடி: இப்படிப்பட்ட சூழலில்தான், நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் ரிசல்ட், பாஜகவுக்கு புது தெம்பை தந்துள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதியிலும் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. இதற்கு நடுவில், பாமகவும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறது. இதனால், திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.. எனவே, பாமகவும், பாஜகவும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எடுக்கலாம் என்கிறார்கள்.
பாமகவை பொறுத்தவரை, இடைத்தேர்தலில் அந்த அளவுக்கு போட்டியிட ஆர்வம் காட்டுவதில்லை.. ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவை தந்துவிட்டு, ஒதுங்கிவிடுவது வழக்கமாகும்.
பாஜக, பாமக: ஆனால், இப்போது அப்படி ஒதுங்க முடியாமல் போனதற்கு 2 காரணங்கள் உண்டு.. ஒன்று, தருமபுரி தொகுதியில் திமுக கூட்டணியிடம் தோற்றதை இன்னமும் பாமக தரப்பினரால் ஜீரணிக்கவே முடியவில்லை..
தருமபுரி என்றில்லாமல் வடமாவட்டத்தில் வலுவாக இருந்தும்கூட ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாத ஆதங்கம் உள்ளது. அதுமட்டுமல்ல, இந்த விக்கிரவாண்டி தொகுதி பாமகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதியாகும். எனவே, லோக்சபா தேர்தலில் விட்டதை, இந்த இடைத்தேர்தலில் எட்டிப்பிடித்துவிட பாமக முயல்கிறது.. அந்தவகையில் பாமகவுக்கே விக்கிரவாண்டியை பாஜக விட்டுக்கொடுக்கலாம் என்றே கணிக்கப்படுகிறது.
பாமக முடிவு: இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பேயே, அமமுகவும் விக்கிரவாண்டியில் போட்டியிடலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்து படுதோல்வியை தழுவியிருக்கிறது அமமுக.. சொந்த சமூகத்தினரின் வாக்குகளையும் தினகரனால் முழுமையாக பெற முடியாத சூழலில், அதிர்ச்சி தோல்வியிலிருந்து இன்னமும் மீளவில்லை.
எனவே, விக்கிரவாண்டியை குறி வைத்திருக்கிறதாம் அமமுக. அமமுக மாவட்ட, கிளை கழக நிர்வாகிகள் மூலம் கள ஆய்வு நடத்த டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளாராம்..
கூட்டணி குழப்பம்: பாஜக ஒருபக்கம், பாமக மறுபக்கம், இதற்கு நடுவில் அமமுக என்று ஆளுக்கொரு பக்கம் விக்கிரவாண்டியில் போட்டியிட ஆர்வம் காட்டிவருவதால், கூட்டணி குழப்பம் ஆரம்பமாகியிருக்கிறதாம். பாமக, அமமுக ஆகிய 2 கட்சிகளுமே போட்டியிட வாய்ப்பு கேட்பதால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். எனினும், விரைவில் கூட்டணிக்கு பாதகம் வராத அளவுக்கு தமிழக பாஜக, சுமூக முடிவை அறிவிக்கும் என்றே நம்பப்படுகிறது.
ஒருவேளை, அதிமுக போட்டியிட முடிவு செய்தால், மூத்த தலைவர் சிவி சண்முகம், யாரை வேட்பாளராக அறிவிக்க போகிறார் என்று தெரியவில்லை.. அப்படி அறிவித்தால் திமுக Vs அதிமுக என்று களம் மாறுமா? அல்லது திமுக Vs பாமக என களம் அமையுமா? என்று தெரியவில்லை..
பரபரப்பு: ஆனால், நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, இடைத்தேர்தல் என்றாலே, அது ஆளும் கட்சிக்கு சாதகமான முடிவையே பெற்றுத்தரும் என்பது எழுதப்படாத முடிவாக அமைந்து வருகிறது.. இந்த முறை இந்த கணக்கு மாறுமா? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications