"ஆபாசம்".. கமல்ஹாசன் குறித்து அவதூறாக பேச்சு.. சிக்கலில் மாட்டிய ராதாரவி.. பாய்ந்தது வழக்கு!
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக கட்சியை சேர்ந்த நடிகர் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இங்கு காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமார் போட்டியிட உள்ளார். இந்த நிலையில் கோவை தெற்கின் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் களமிறங்குகிறார்.
இதனால் இங்கு கடுமையான மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் கோவை தெற்கு தொகுதி ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக மாறியுள்ளது.

எப்படி
இந்த நிலையில் வானதி சீனிவாசனுக்காக பாஜக கட்சியை சேர்ந்த நடிகர் ராதாரவி கடந்த வாரம் பிரச்சாரம் செய்தார். கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்த ராதாரவி, கமலை கடுமையாக விமர்சனம் செய்தார். கமலை பல்வேறு இடங்களில் ஒருமையில் பேசியதோடு, அவதூறான கருத்துக்களையும் ராதாரவி பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.

பெண்கள்
கோவை பிரச்சாரத்தில் பேசிய ராதாரவி, தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மையில்லாதவர் கமல்ஹாசன். அவர் நிறைய பெண்களுடன் வாழ்ந்து இருக்கிறார். ஆனால் அவர்களை கடைசிவரை காப்பாற்றாமல் கைவிட்டவர்தான் கமல். பெண்களை காக்க முடியாதவர் எப்படி மக்களை காப்பாற்றுவார். அவர் திமுகவின் பி டீம்.

ஏமாற்றுக்காரர்
கமல்ஹாசன் ஒரு ஏமாற்றுக்காரர் என்று ராதாரவி தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். அதோடு கமல்ஹாசன் குறித்து ஆபாசமாகவும் ராதாரவி சில மோசமான கருத்துக்களை குறிப்பிட்டு இருந்தார். கமல்ஹாசன் அவதூறு பரப்பும் வகையில் ராதாரவி பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. மநீம உட்பட பல்வேறு கட்சியினர் ராதாரவியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

வழக்கு
இந்த நிலையில் கமலை விமர்சித்த ராதாரவி மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராதாரவியின் பேச்சு சர்ச்சையானதை அடுத்து தேர்தல் அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராதாரவி மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. பிரபலங்கள் குறித்து ராதாரவி தொடர்ந்து இப்படி ஆபாசமாக பேசி வருவதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications