ரேஷனில் நின்றால் பலருக்கும் பரவும் அபாயம்.. வீட்டுக்கே சென்று ரூ.1000 நிதியை வழங்க கோரி வழக்கு
சென்னை: கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் மற்றும் ரேஷன் பொருட்களையும் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தினக்கூலி உள்ளிட்ட தொழிலாளர்கள் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியன இலவசமாக வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது.

சமூக விலகலை பின்பற்றும் வகையில், நியாய விலைக் கடைகளில் மக்கள் கூட்டம் சேராமல் இருக்க டோக்கன் வழங்கப்பட்டு, அவர்களுக்கு கொரோனா நிதியுதவி உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிதியுதவி, ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், கொரோனா பாதித்த ஒருவர், நியாய விலைக் கடைக்கு வந்தால், பலருக்கு கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications