ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு.. நடிகர் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமீன்
சென்னை: ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால், கொந்தளித்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் அந்த நிகழ்ச்சியைப் பதிவு செய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர்.

சிவசேனா கட்சியினர் அடித்து நொறுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, குணால் கம்ரா மீது ஒரு வழக்கும் அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவைச் சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீதும் என இரண்டு வழக்குகளை மும்பை காவல்துறை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குணால் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் . அந்த மனுவில் விழுப்புரத்தில் வசித்து வருவதாகவும், தான் மும்பை சென்றால் தன்னை போலீஸார் கைது செய்வார்கள் என்றும், சிவசேனா தொண்டர்களால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாகவும், எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர்மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் எஸ்.சுரேஷ் ஆஜராகி, அவர் எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை, அவர் நன்கு அறியப்பட்ட நகைச்சுவை நடிகர் என்றும், நிகழ்ச்சி ஜனவரி மாதம் நடந்தததாகவும், வீடியோ சமீபத்தில் பதிவேற்றப்பட்டதாகவும், அவரது நையாண்டி பேச்சு, பேச்சு சுதந்திரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார். ஆளுங்கட்சி அமைச்சர்களால் மிரட்டப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதி, குணால் கம்ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார். வழக்கு குறித்து மகாராஷ்டிரா கார்க் போலீஸ் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications