"அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதி.." நாங்குநேரி சம்பவம் குறித்து பா.ரஞ்சித் ஆவேசம்
சென்னை: சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து, அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம் என்று திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவரையும் அவரது சகோதரியையும் உடன் படித்த மாணவர்களே சாதிய வன்மத்துடன் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்துள்ளது. அரிவாள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அண்ணனை காப்பாற்றச் சென்ற தங்கையும் காயம் அடைந்துள்ளார்.

இருவரும் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த பள்ளி மாணவரின் தாத்தாவும் அதிர்ச்சியில் உயிரிழந்தார். பள்ளி மாணவர்கள் மனதிலேயே சாதி என்னும் கொடிய நஞ்சு பரவியிருக்கிறதே என சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டை நடுங்க வைத்து இருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேரை கைது செய்துஇருக்கும் போலீசார் சிறார் கூர் நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சாதியபாகுபட்டுடன் நடைபெற்று பள்ளி மாணவர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். மாணவர்களிடமும் சாதிய நச்சு ஊடுருவி இருப்பது சகிக்கமுடியாதது என்று கூறியிருந்த முதல்வர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில், மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக, ஆசிரிய சமூகமானது இதுபோன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது.
பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள், நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டு இருந்தார். அதேபோல், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித், நான்குநேரி சம்பவம் குறித்து தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-
சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே "நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications