காவிரிக்காக கையில் தேசியக்கொடி.. அடிக்கப்போறியா?.. மெரினாவில் பி ஆர் பாண்டியன் குண்டுக்கட்டாக கைது
சென்னை: காவிரி தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர் பாண்டியனை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
காவிரி நதிநீர் விவகாரம் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று அரசை வலியுறுத்தும் கர்நாடகா மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சனிக்கிழமை மண்டியா விவசாயிகள் பந்த் நடத்தினர்.

நாளைய தினம் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல செப்டம்பர் 29ஆம் தேதியன்றும் பெங்களூரில் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில பந்த் காரணமாக அங்கு வசிக்கும் தமிழர்களிடையே பதற்றம் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டிலும் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே பிஆர் பாண்டியன் கையில் தேசியக்கொடியோடு மத்திய அரசே மோடி அரசே கர்நாடகாவின் பந்த் போராட்டத்தை தடுத்து நிறுத்து தடுத்து நிறுத்து என்று முழக்கமிட்டார் பிஆர் பாண்டியன். அப்போது காவல்துறையினர் பிஆர் பாண்டியனை கைது செய்ய முயற்சி செய்தனர். அவர் எழுந்திருக்க மறுக்கவே அவரது கையை பிடித்து தூக்க முயற்சி செய்தனர்.

அப்போது பிஆர் பாண்டியன் அடிக்கப்போறியா?அடி என்று கூறினார். முதல்வர் ஸ்டாலின் காரை மறிக்க முயன்றதாக கூறி பிஆர் பாண்டியனை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிஆர் பாண்டியன் மெரினாவில் கையில் தேசியக்கொடியோடு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications