சூப்பர்! காவிரி ஆற்றில் 5,000 கனஅடி நீர் திறப்பு! இந்தாண்டில் முதல்முறை! டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி
சென்னை: கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளிலும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் முதல்முறையாகக் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இதுவரை தீவிரமாகப் பெய்யத் தொடங்கவில்லை... மழை தீவிரமடையாததால் மேட்டூர் அணை தண்ணீர் நம்பி குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்தனர்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் இருப்பு உயர்ந்து வரும் போதிலும், தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய நீரைக் கர்நாடக கொடுக்க மறுத்தே வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் அளவு 150 அடியாகச் சரிந்திருந்தது.

காவிரி: தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நீரைக் கர்நாடகா உடனடியாக தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனும் டெல்லி சென்று திரும்பியிருந்தார். இதற்கிடையே இப்போது காவிரி ஆற்றில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2487 கன அடி நீரும் கபினி அணையில் இருந்து 2500கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.. இந்தாண்டில் காவிரி ஆற்றில் 5000கன அடி நீர் திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.. நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நீர் வரத்து: குடகு மாவட்டத்தில் கனமழை எதிரொலியாக கேஆர்எஸ், கபினி, ஹரங்கி அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 7914 கன அடி நீரும், கபினி அணையில் 7886 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. இதில் கபினி அணையின் முழு கொள்ளளவு 84 அடி அடியாகும். இதில் இப்போது 74.33 அடிக்கு நீர் இருக்கும் நிலையில், இப்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அணைகளின் பாதுகாப்பு கருதி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை என்பது காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மிகப் பெரிய அணையாகும். சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த அணை 120 அடி ஆழம் கொண்டதாகும். இதில் இப்போது சுமார் 72 அடி நீர் இருப்பு இருக்கிறது. கடந்தாண்டு இதே நேரத்தில் அணையின் முழு கொள்ளளவும் நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தியும் கர்நாடக நீரைத் தர மறுத்து வந்தது. இதற்கிடையே இப்போது கர்நாடகாவில் உள்ள அணைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications