CBSE Class 10: பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் எந்த நகரம் டாப்? சென்னைக்கு எத்தனையாவது இடம்?
டெல்லி: 2026 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி சதவீதத்தில் எந்த நகரம் முதலிடம் பெற்றது என்பதையும் சென்னைக்கு எத்தனையாவது இடம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.70 ஆகும். திருவனந்தபுரம், விஜயவாடா ஆகிய இரு நகரங்களும் தலா 99.79% தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளது.

அது போல் சென்னை 99.58 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லி மேற்கு பகுதியில் 97.45 சதவீத தேர்ச்சியும் கிழக்கு பகுதி 97.33 சதவீத தேர்ச்சியும் உள்ளது. தேர்ச்சி சதவீதத்தில் கடைசி இடத்தில் இருப்பது குவாஹாட்டிதான். 85.32 சதவீதம் பெற்றிருக்கிறது.
CBSE 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் , பிப்ரவரி 17 அன்று தொடங்கி மார்ச் 11, 2026 வரை நடைபெற்றன. இதன் முடிவுகள் இன்று வெளியாகின.
இந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 25,08,319 மாணவர்கள் தேர்வு எழுதப் பதிவு செய்திருந்தனர். இதில் 14,08,546 மாணவர்களும், 10,99,773 மாணவிகளும் அடங்குவர். நாடு முழுவதும் 8,075 தேர்வு மையங்களில் 83 பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு 93.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 94.99 சதவீதமும் மாணவர்கள் 92.6 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை cbse.gov.in, results.cbse.nic.in, cbseresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் சரிபார்க்கலாம். மதிப்பெண் பட்டியல்களைப் பதிவிறக்க மாணவர்கள் கீழ்க்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்: முதலில், CBSE-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். அடுத்து, "CBSE Class 10 Result 2026" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
தற்போது முதல் வாரிய தேர்வு முடிவுகளே வெளியாகியுள்ளன. இது அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமானது. இரண்டாம் வாரிய தேர்வு விருப்பத் தேர்வாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தேர்வு மே 15 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறும்.
பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இன்றி நடத்தப்படும் இந்த தேர்வில் அதிகபட்சமாக 3 பாடங்களில் மதிப்பெண் மேம்பாட்டிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் தேர்வில் இரு பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கம்பார்ட்மென்ட் பிரிவில் வைக்கப்பட்டு அவர்கள் இந்த இரண்டாவது தேர்வில் பங்கேற்கத் தகுதி உடையவர்கள் ஆவர்.
ஆனால் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த அல்லது தேர்வுக்கு வராத மாணவர்கள் இரண்டாவது தேர்வை எழுத முடியாது. அவர்கள் 2027 ஆம் ஆண்டு நடக்கும் முதன்மைத் தேர்வில் மட்டுமே பங்கேற்க முடியும்.












Click it and Unblock the Notifications