சென்னை ரயிலில் செல்போன் பறிப்பு.. திருடர்களை பிடிக்க ஒடும் ரயிலில் இருந்து குதித்தவர் சாவு
சென்னை: சென்னையில் ரயில் படிக்கட்டில் பயணித்த ஆந்திர வாலிபரிடம் வழிபறி கொள்ளையர்கள் செல்போனை பறித்தனர். திருடர்களை பிடிக்க முயற்சித்து ரயிலில் இருந்து குதித்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 2 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலம் கூடுரை சேர்ந்தவர் சாந்தினி பாஷா (வயது 26). இவர் நேற்று சென்னை சென்ட்ரலில் இருந்து ஜிடி விரைவு ரயிலில் ஏறி கூடுருக்கு சென்று கொண்டிருந்தார். திருவொற்றியூர், எண்ணூர் அருகில் ரயில் மிதவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாந்தினி பாஷா ரயில் படிக்கட்டில் அமர்ந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அங்கு தண்டவாளம் பகுதியில் நின்று கொண்டிருந்த 3 மர்ம இளைஞர்கள், சாந்தினி பாஷாவின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். பதறிப்போன சாந்தினி பாஷா அவர்களை பிடிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஓடும் ரயிலில் இருந்து குதித்தார். இதில் கீழே விழுந்த அவர் கல்லில் மோதி படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த வந்த கொருக்கு பேட்டை ரயில்வே போலீசார் போலீசார் சாந்தினி பாஷாவின் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் எண்ணூரைச் சேர்ந்த நாகராஜ்(22), சூர்யா(19) ஆகிய இரண்டு பேரை கொலை வழக்கில் கைது செய்தனர். மேலும் செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடிவருகின்றனர்..












Click it and Unblock the Notifications