தமிழகத்தில் தவிக்கும் பள்ளிகள்.. சமக்ர சிக்ஷா அபியான் நிதி நிறுத்தப்பட்டது ஏன்? மத்திய அரசு பதில்
சென்னை: மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் என்ற பெயரிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பள்ளிக்கல்விக்கு வழங்குகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டுக்கான முதல்கட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட (சமக்ர சிக்ஷா அபியான்) நிதி நிறுத்தி வைக்கப்பட்டது. நிதியை நிறுத்தி வைத்தது ஏன் என்பதற்கான காரணத்தை மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு பள்ளிக் கல்வியில் சமக்ர சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை 2018ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் படிப்பு வரையில் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து நிலைகளிலும் சமமான தரமான கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மூலம் உறுதி செய்யப்படும்.

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை (Unified District Information System for Education) தகவல் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு இத்திட்டம் மூலம் வலுப்படுத்தப்படுகிறது. அத்துடன், ஆண்டுதோறும் பள்ளிக் கட்டடங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மேற்கொள்ளவும் வசதிகளை மேம்படுத்தவும் இத்திட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
கல்வியின் தரம் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிகளின் தலைவர்களுக்கான பயிற்சிகள், மாநில அளவிலும், தேசிய அளவிலும் சாதனைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளவும், ஒவ்வொரு பள்ளிக்கும் நிதியுதவி அளிக்கவும் இத்திட்டம் வகை செய்யும். மேலும், கற்றலுக்கு ஏற்ற சூழல், நூலகங்கள், விளையாட்டு உபகரணங்களுக்கான மானியங்கள் ஆகியவற்றுக்கும் துணை புரியும் என்று மத்திய அரசு ஒருமுறை விளக்கம் அளித்தது.
இதன்படி பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சில குறிப்பிட்ட நிதிகளை மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் என்ற பெயரில் வழங்கி வாயிலாக வழங்குகிறது. இந்த நிதி ஒவ்வொரு ஆண்டும் 4 கட்டங்களாக வழங்கப்படுவது வழக்கம்.
இதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் இந்த நிதி செலவிடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் முன்மொழியப்படும் மொத்த நிதியில், மத்திய அரசு சார்பில் 60 சதவீதமும், மாநில அரசு சார்பில் 40 சதவீதமும் ஒதுக்கப்படும். தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் (2024-25) மத்திய அரசு ரூ.2,152 கோடியை தன் பங்கு நிதியாக வழங்க முன்மொழிந்து இருந்தாக கூறப்படுகிறது. அதில் முதல்கட்ட நிதியான ரூ.573 கோடியை கடந்த ஜூன் மாதத்தில் மத்திய அரசு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை முதல் கட்ட நிதியை வழங்காமல் உள்ளது.
இதற்கு மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு இணைய ஒப்புக்கொள்ளாததால், அந்த நிதி நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழி கல்வி கொள்கை இருப்பதால் அதனை ஏற்க மாநில அரசு மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதி எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை தெரிவித்துள்ளது. இதன்படி "2024-25-ம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்ஷா அபியான் நிதியை வழங்க சில நிர்வாக அனுமதி பெற வேண்டியிருக்கிறது . அந்த நிர்வாக செயல்முறைகள் முடிந்ததும் எப்போது நிதி ஒதுக்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளது. அதேநேரம் கடந்த 2020-21-ம் கல்வியாண்டில் இருந்து 2023-24-ம் கல்வியாண்டு வரையிலான 4 ஆண்டு காலங்களில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியாக முன்மொழியப்பட்ட மத்திய அரசின் பங்கான ரூ.7 ஆயிரத்து 508 கோடியே 27 லட்சத்தில், ரூ.7 ஆயிரத்து 199 கோடியே 55 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்றும் மத்திய அரசு தனது பதிலில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications