பாரிவேந்தருக்கு மத்திய அமைச்சர் வாய்ப்பு? உற்சாகத்தில் ஐஜேகே தொண்டர்கள்!
சென்னை: இந்த முறை பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராக வருவார் என ஒரு தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தேர்தலில் அதிக கவனம் பெற்ற தொகுதியாகப் பெரம்பலூர் தொகுதி மாறியுள்ளது. அதற்குக் காரணம், கடந்த முறை 6.84 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற பாரிவேந்தர், இந்த முறை எவ்வளவு வாக்குகளைப் பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கூடவே திமுக அமைச்சரின் மகன் களம் காணும் தொகுதியாக அது மாறி உள்ளது. அமைச்சர் மகன் முதல்முறையாகக் களம் காண்கிறார். அவருக்குப் பெரிய அளவில் அரசியல் அனுபவம் கிடையாது. கூடவே தொகுதிக்கும் புதியவர்.
பாரிவேந்தரோ கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் தொகுதியை மையமாக வைத்து இயங்கி வருகிறார். மேலும் ஊழல் புகார் இல்லாத எம்பி ஆகவும் வலம் வருகிறார்.
இந்தத் தொகுதியில் 3வது முறையாகப் போட்டியிடும் பாரிவேந்தருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது. இதே மாவட்டத்தில் ஒரு காலத்தில் ரயில்வே அதிகாரியாக பணியாற்றி அனுபவம் பெற்றவர் ஆசீர்வாதம் ஆச்சாரி.
இன்றைக்கு நாடு அறிந்த அரசியல் விமர்சகராக வலம் வருபவர். அவர் என்ன சொல்கிறார்? அவரிடம் பேசினோம்.
இது குறித்து ஆசீர்வாதம் ஆச்சாரி, "பெரம்பலூர் தொகுதி எனக்கு நெருக்கமானது. காரணம், அது என் சொந்த தொகுதி. நான் அங்கே அரசு அதிகாரியாக பணியாற்றி இருக்கிறேன். 2009க்கு முன்பு அது தனித் தொகுதியாக இருந்தது.

ஆகவே அதுவரை தி.மு.க சார்பாக ஆ.ராசா போட்டியிட்டு வந்தார். அதன்பின்னர் அது பொதுத் தொகுதியானதும் ஆ.ராசா நீலகிரிக்கு மாறினார்.
இதைப் பெரம்பலூர் தொகுதி எனச் சொன்னாலும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்கள்தான் அதிகம் இதற்குள் வருகின்றன. லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, குளித்தலை எல்லாம் திருச்சியைச் சார்ந்த பகுதிகள்தான்.
இந்தத் தொகுதியில் 2014 முதல் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். ஆகவே அவருக்கு என்று ஒரு செல்வாக்கு இந்தத் தொகுதியில் உள்ளது. அதை அவர் வாங்கி உள்ள வாக்கு சதவீதங்களைப் பார்த்தாலே தெரியும்.
கிட்டத்தட்ட அவர் 6.84 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இந்தளவுக்கான வாக்குகளை இவரை இந்தத் தொகுதியில் வேறு எந்த வேட்பாளரும் வாங்கியதில்லை. ஆகவேதான் அவரை நட்சத்திர வேட்பாளர் என நான் சொல்கிறேன்.
இவர் சுயேச்சை வேட்பாளராக நின்றால் கூட, அங்கே சுமார் 2 லட்சம் வாக்குகளைப் பெறுவார். அந்தளவுக்கு அவர் அந்தத் தொகுதி மக்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டவராக இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் நிறைய நலத் திட்டங்களைத் தனது நிறுவனங்களின் நிதியிலிருந்து எடுத்துச் செலவழித்திருக்கிறார்.
அதைப் போல ஒரு மதத்தினர் என்று இல்லாமல் அனைவருக்கும் பொதுவாகச் செயல்பட்டுள்ளார். பள்ளி வாசல் கட்டிக் கொடுத்துள்ளார். தேவாலயம் கட்டித் தந்துள்ளார். கோயில்களுக்கு நிறையச் செலவழித்திருக்கிறார்.
இப்படி பாரிவேந்தர் அவரது அறக்கட்டளை நிதியிலிருந்து 126 கோடியை பல்வேறு நலத்திட்டங்களுக்காகச் செலவழித்திருக்கிறார். இவருக்கு முன்னால் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசாகூட இப்படி இந்தத் தொகுதிக்கு இவ்வளவு தொகையைச் செலவு செய்ததில்லை.
அதைப்போல ஒரு எம்பியாக அவர் நாடாளுமன்றத்தில் ஆக்டிவ் ஆகச் செயல்பட்டுள்ளார். சுமார் 268 கேள்விகளை அவர் எழுப்பி இருக்கிறார். டாப் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என நீங்கள் ஒரு பட்டியல் தயாரித்தால், அது கட்டாயம் பாரிவேந்தர் இருப்பார்.

நான் பல ஆண்டுகளாக எம்பிகளின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு எல்லாம் செய்திருக்கிறேன். அப்படியான ஆய்வுகளில் 5 ஆண்டுகள் எம்பியாக உள்ள ஒருவர் ஒரு தனிநபர் மசோதா கூட கொண்டுவந்திருக்க மாட்டார். அப்படிப் பல எம்பிகளை என்னால் பட்டியல் போட முடியும்.
ஆனால், பாரிவேந்தர் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகி அவைக்குச் சென்ற போதே அவர் 2 தனிநபர் மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளார். அது ஆச்சரியமாக உள்ளது.
வருகைப்பதிவு கூட பாரிவேந்தருக்கு நல்ல அளவில் உள்ளது. அதாவது 62% உள்ளது. இதில் 2 ஆண்டுகள் கொரோனா நடவடிக்கையால் நாடாளுமன்றமே நடக்கவில்லை. அது நடந்திருந்தால், இவர் இன்னும் அதிகப்படியான பதிவை எட்டி இருப்பார்.
நான் ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது ரயில்வே அதிகாரியாக இருந்தேன். அப்போது பெரம்பலூர் தொகுதிக்கு ரயில் இணைப்பை ஏற்படுத்த முயற்சிகள் எடுத்தோம். ஆனால், அது நிறைவேறவில்லை. ஒரு அதிகாரியாக இருந்ததால் பல விசயங்களை நான் அறிவேன்.
ஆ.ராசாவுக்குப் பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து அந்த ரயில் திட்டத்தைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொண்டவர் பாரிவேந்தர் தான். வேறு யாருமே யோசிக்கவே இல்லை.
மத்திய ரயில்வே அமைச்சரைச் சந்தித்து இந்திய ரயில் பாதையுடன் பெரம்பலூரை இணைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை பாரிவேந்தர் எடுத்து சக்சஸ் செய்து விட்டார். இந்த ஒரு சாதனையே அவரது பதவிக் காலத்திற்கு போதுமானது.

இந்தத் தேர்தலில் கூட பாரிவேந்தர் தான் முன்னணியில் இருக்கிறார். அங்கே அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் யார் என்றே மக்களுக்குத் தெரியாது.
நான் கூட அந்தத் தொகுதிக்காரன் என்பதால் இதைத் தைரியமாகச் சொல்கிறேன். சொல்லப் போனால் பாரிவேந்தர் பக்கத்தில் வரும் அளவுக்குப் பெரம்பலூரில் வேறு வேட்பாளரே இல்லை. அதுதான் உண்மை.
அவர் இந்த முறை வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராக வருவதற்குக் கூட வாய்ப்பு உள்ளது. அந்தக் கனவு விரைவில் நிறைவேறும்" என்கிறார்.












Click it and Unblock the Notifications