அடுத்த 2 வாரம்.. திக்திக்.. நிலவில் நகரும் பிரக்யான் ரோவர்.. என்ன செய்யும் தெரியுமா? பரபர பின்னணி
சென்னை: சந்திரயான் 3ன் பிரக்யான் ரோவர் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறது, அடுத்து என்ன செய்யும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
சந்திரனை இந்தியா அகப்படுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சந்திரயான் 2 திட்டம் பாதி தோல்வி அடைந்த நிலையில் சுணங்கி போய் இருந்த இஸ்ரோ கடுமையான உழைப்பிற்கு பின் சந்திரயான் 3 திட்டத்தை முழு வெற்றியாக்கி சாதனை படைத்து உள்ளது.

நிலவிற்கு விக்ரம் லேண்டர், பிரக்யான் லேண்டர் இரண்டையும் வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. அதோடு நிற்காமல் நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் மனித பொருள் , லேண்டர், ரோவர் என்ற சாதனையையும் இந்தியா தன் வசமாக்கி உள்ளது.
ரோவர் எப்படி நகர்ந்தது?: விக்ரம் லேண்டர் உள்ளேதான் சந்திராயன் 3ன் ரோவர் இருந்தது. பிரக்யான் ரோவர் (சமஸ்கிருதத்தில் "ஞானம்"), விக்ரமில் இருந்து வெளியே வந்தது. அதன் உள் கேமராக்கள் சந்திரனில் இருக்கும் தடங்கல்களை பார்த்து அதற்கு ஏற்ப கவனமாக நகர்ந்து செல்ல தொடங்கி உள்ளது. இது லேண்டர் விக்ரமில் இருந்து விலகி சென்றாலும் எல்லா நேரமும் விக்ரமின் கண் பார்வையில் இருக்கும். நிலவின் தரைப்பகுதி, மண் பகுதியை இது ஆய்வு செய்யும்.
இதில் சூரிய வெளிச்சத்தை, குளிரை தாங்க தங்க நிறத்தில் கவர் செய்யப்பட்ட பகுதி இருக்கும். இது 14 நாட்கள் இயங்கும். சோலாரில் இயங்க கூடியது. கடந்த 3 நாட்களுக்கு முன் வெற்றிகரமாக இது களமிறக்கப்பட்டது.
அடுத்து என்ன?: இந்த நிலையில் அடுத்த 11- 13 நாட்கள் இது நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ளும். இதுவரை திட்டமிட்ட பணிகள் எல்லாம் சரியாக நடந்து உள்ளன. இனி அவை ஆய்வுகளை மேற்கொள்வது மட்டுமே பாக்கி. சந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது.
லேண்டரை சரியாக நிலவில் தரையிறக்குதல்.
சந்திரனில் ரோவரின் நகரும் திறன்களைக் கவனித்து கண்காணித்தல்.
நிலவின் இரசாயன மற்றும் இயற்கை கூறுகள், மண், நீர் பண்புகளை ஆய்வு செய்தல்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்தல் ஆகிய பணிகளை செய்யும்.
இப்போது பிரக்யான் ரோவர் கிட்டத்தட்ட 900 மீட்டர் நகர்ந்து உள்ளது. அதேபோல் இது மேலும் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அதன் இணைப்பு, செயல்பாடு எல்லாம் சரியாக உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அந்த நொடி என்ன நடந்தது?: பிரக்யான் நிலவில் இறங்கிய நேரத்தில் சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலம் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டருக்கு "கோ அஹெட்" சிக்னல் அனுப்பப்பட்டது. இது விக்ரம் லேண்டர் இறங்கி சரியாக 4 மணி நேரம் கழித்து புழுதி எல்லாம் அடங்கிய பின் அனுப்பப்பட்டது. விக்ரம் லேண்டரால் ஏற்பட்ட புழுதி ரோவரின் மீது படியாமல் இருக்க இந்த கால நேரம், எடுத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து ரோவருக்கு ஆர்பிட்டர் கொடுத்த சிக்னலை லேண்டர் பகிர்ந்து கொண்டது.
விக்ரமின் ஒரு பக்க பேனல் விரிவடைந்தது, பிரக்யான் ரோவர் வெளியே வருவதற்கு ஒரு சரிவை உருவாக்கியது. பிரக்யானின் சக்கரங்கள் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவுடன் பொறிக்கப்பட்டுள்ளன. விக்ரமின் வயிற்றுப் பகுதியில் இருந்து பிரக்யான் வெளியே வந்து.. லேண்டரில் இருக்கும் பேனல் வழியாக சரிந்து ரோவர் வெளியே வந்தது.
ஒரு செமீ: ஒவ்வொரு செமீ என்ற விகிதத்தில் மிக மெதுவாகவே பிரக்யான் ரோவர் நகர்ந்து செல்லும். இது எடுத்து வைக்கும் ஒவ்வொரு செமீட்டரும் மிக முக்கியம். ஒரு நொடிக்கு ஒரு செமீ என்ற விகிதத்தில் இது நகர்ந்து செல்லும். இது ஒரு சின்ன சோதனை கூடம் போலவே செயல்படும். இது நிலவின் மேல் பகுதி ஆய்வு, சாம்பிள் ஆய்வு, சாம்பிளை எடுத்து வைத்துக்கொள்வது, சில புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது, உள்ளே இருக்கும் ஜியோலாஜிக்கல், கெமிக்கல் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.
இந்த ரோவர் அனுப்பும் போட்டோக்கள், தகவல்கள் எல்லாம் விக்ரம் லேண்டருக்கே செல்லும். அங்கிருந்து ஆர்பிட்டருக்கு செல்லும். அந்த ஆர்பிட்டர் மூலம் ரியல் டைமில் உடனுக்குடன் இஸ்ரோ கண்ட்ரோல் அறைக்கு எல்லா தகவல்களும் வரும். 14 நாட்கள் பூமி நேரப்படி இது நிலவில் ஆய்வு செய்யும்.












Click it and Unblock the Notifications