சென்னை பீச் - வேளச்சேரி ரயில் சேவையில் பெரிய மாற்றம்.. இனி கடற்கரை வரை போகாதாம்.. 27ம் தேதி முதல்
சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் வரையிலான நான்காவது ரயில் வழித்தட பாதை பணிகள் நடைபெற இருப்பதால் கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் ரயில் சேவையில் வரும் 27 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வைப்பதில் புறநகர் மின்சார ரயில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. சென்ன கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, சென்ட்ரல்- அரக்கோணம், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, கடற்கரை- திருவெற்றியூர், கடற்கரை-வேளச்சேரி என புறநகர் ரயில் சேவை சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளை இணைக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த புறநகர் ரயில்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதிலும் பீக் நேரங்களில் ரயில்கள் சில நிமிடங்கள் தாமதம் ஆனாலே ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதும். அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ள வேளச்சேரி, பெருங்குடி, திருவான்மியூர், கஸ்தூரிபாய் நகர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மெரினா கடற்கரைக்கு செல்ல பயணிகள் அதிகம் பயன்படுத்தும் திருவல்லிக்கேணி ரயில் நிலையம், சேப்பாக்கம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் வழியாக இந்த ரயில் செல்கிறது.
8 பெட்டிகளை கொண்டதாக இந்த பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். விரைவில் பறக்கும் ரயில் சேவை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு நீடிக்கப்பட உள்ளது. இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தை பயணிகள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.
இதற்கிடையே, எழும்பூர் வரை மட்டுமே நான்கு வழித்தட பாதையாக இருக்கும் நிலையில், இதை சென்னை கடற்கரை வரை நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அண்மையில் பறக்கும் ரயில் சேவையை சேப்பாக்கம் வரை மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், அறிவிப்பை தெற்கு ரயில்வே திரும்ப பெற்றது.

இதன் காரணமாக வேளச்சேரி- கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை எப்போதும் போல் இயங்கி வருகிறது. பயணிகள் நிம்மதி பெரு மூச்சு விட்ட நிலையில், சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவையில் வரும் 27 ஆம் தேதி முதல் பகுதியளவு மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதாவது, வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. 7 மாதங்களில் ரயில்வே இந்த பணிகளை திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேளச்சேரி கடற்கரை ரயில் சேவைக்கு பாதிப்பு இல்லாமல் 4வது வழித்தட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்த நிலையில், தெற்கு ரயில்வே தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம் பார்க் டவுன் வரையாவது ரயில்களை இயக்க வேண்டும் என்றும், கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பயணிகளின் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. தற்போது தெற்கு ரயில்வே வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு வேளச்சேரி - சென்னை கடற்கரை பறக்கும் ரயிலை பயன்படுத்தும் பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications