துணை மேயர், மாநகர ஆணையருக்கு மேயர் பிரியா சவால்.. ரெண்டு கலர் குப்பைத் தொட்டிகளோடு.. என்ன விவரம்?
சென்னை : குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கும் சவாலுக்கு துணை மேயர் மற்றும் மாநகர ஆணையர் ஆகியோருக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அழைப்பு விடுத்துள்ளார்.
குப்பைகளை தரம் பிரித்து அளிக்காதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் சவாலில் கலந்து கொள்ள துணை மேயர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் குப்பை
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஒரு சில வீடுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என முறையாக தரம் பிரித்து வழங்கப்படுகின்றன. பெரும்பாலான வீடுகளில் அவ்வாறு குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது.

மீறினால் அபராதம்
இதையடுத்து, சென்னை உட்பட ஒவ்வொரு மாநகராட்சியிலும் பொதுமக்களிடம் இருந்து குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் முறை நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள மக்கள், குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், தனி நபர் இல்லங்களுக்கு ரூ.100, மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. இது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு போட்டி
மேலும், 'என் குப்பை, எனது பொறுப்பு 'என்ற தலைப்பில் Chennai Enviro Solution எனும் அமைப்புடன் இணைந்து 'Chennai Enviro's Source segregation Challenge 2022' போட்டி ஒன்றை நடத்தவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க 89258 00864 என்ற எண்ணிற்கு missed call கொடுக்க வேண்டும். இன்று (ஜூலை 9) முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

நான் பிரித்து கொடுக்கிறேன்
இந்நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், தன் வீட்டில் மக்கும் குப்பை - மக்காத குப்பை என்று குப்பையை தரம் பிரித்து வழங்கியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்டு, "எங்கள் வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குகிறேன். என் குப்பை, எனது பொறுப்பு என்ற உணர்வோடு நமது சென்னை மக்கள் அனைவரும் தங்களது வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

சேலஞ்ச்
மேலும், இந்த மாபெரும் குப்பை தரம் பிரித்து வழங்கும் சவாலில் சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி, தலைமை பொறியாளர் மகேசன் ஆகியோரையும் பங்கு கொள்ள அழைக்கிறேன். நம்ம சென்னை நம்ம பொறுப்பு!" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications