செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,000 கனஅடியாக உயர்ந்ததால் முதல்கட்டமாக 1,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு காரணமாக காவலூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டப்போகிறது. 23.5 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22.15 அடியாக இருக்கிறது.

நிவர் புயலின் தாக்கத்தினால் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளில் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஏரிகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
நிவர் புயலின்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்பயாக குறைக்கப்பட்டு பின்னர் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஏரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் அடையாற்றில் வெள்ளமாக கரைபுரண்டு ஓடியது.
சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் பெருகியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதை அடுத்து வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில் புரேவி புயலின் தாக்கம் காரணமாக தற்போது கனமழை பெய்து வருகிறது. ஏரிக்கு வரும் நீரின் அளவு 3000 கன அடியாக உயர்ந்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவலூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications