சென்னைக்கு ஹை அலர்ட்.. அபாய கட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி! 9 மணிக்கு வெளியேறும் 1000 கனஅடி நீர்
சென்னை: கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 452 கன அடியாக இருந்த நிலையில் தற்போது அது 514 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.

3,645 மி.கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 3,210 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 22.35 அடி வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரி வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரியில் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக நேற்று 200 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி நீர் திறப்பு அளவு 1000 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.
இன்று காலை 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர் வினாடிக்கு 500 கன அடியாக அதிகரித்து இருக்கிறது. செம்பரம்பாக்கத்தில் 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் அதன் கரையோர பகுதிகளான சிறுகளத்தூர், குன்றத்தூர், திருநீர்மலை, அடையாறு, திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அடையாறை பொறுத்தவரை 40 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு இருப்பதால் செம்பரம்பாக்கம் கரையோரம் மற்றும் அதன் நீர் வெளியேற்ற பாதையில் அமைந்து இருக்கும் பகுதி மக்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications