சென்னையில் மூச்சு முட்டுது.. மோசமான காற்றின் தரம்! ஆனாலும், மானத்தை காப்பாற்றிய மழை! என்னாச்சு?
சென்னை: தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தாலும், அதிக அளவில் சென்னைவாசிகள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடினர். இதனால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு குறைவான அளவில் மாசு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மகிழ்ச்சியும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் அதிகாலையிலேயே கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, இனிப்புகள் பகிர்ந்து, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
தலைநகர் சென்னையிலும் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் இடைவிடாமல் பட்டாசு வெடிப்புகள் ஒலித்தன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வண்ணமயமான வானவேடிக்கைகளில் மகிழ்ந்தனர்.

சென்னை காற்று தரம்
ஆனால், தீபாவளி கொண்டாட்டம் முடிந்த மறுநாள் காலை, சென்னையில் காற்று மாசு அளவு கணிசமாக அதிகரித்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, சென்னை முழுவதும் காற்று மாசு தரக்குறியீடு (AQI) சராசரியாக 154 ஆக பதிவாகியுள்ளது. இது "மிதமான மாசு" என வகைப்படுத்தப்படும் அளவாகும். நேற்று மாசு அளவு 80 ஆக இருந்த நிலையில், தீபாவளி இரவில் பட்டாசுகள் வெடித்ததையடுத்து அது இருமடங்காக உயர்ந்துள்ளது.
தீபாவளி மாசு
சில முக்கிய பகுதிகளில் மாசு அளவு இன்னும் அதிகமாக இருந்தது. பெருங்குடி பகுதியில் 217 என்ற அளவுக்கு சென்றது, இது "மோசமான" காற்று தரமாகக் கருதப்படுகிறது. மணலி மற்றும் வேளச்சேரியில் 151, ஆலந்தூரில் 128, அரும்பாக்கத்தில் 145 என பதிவாகியுள்ளது. ஆனால் அதிகாரிகள் தெரிவிப்பதாவது, காற்று மாசு அதிகரித்தாலும், கடந்த ஆண்டு தீபாவளியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மாசு அளவு கணிசமாக குறைந்துள்ளது.
காற்று மாசு அளவு
2024ஆம் ஆண்டு தீபாவளி நாளில், சென்னையின் வளசரவாக்கத்தில் காற்று மாசு அதிகபட்சமாக 287 எனவும், திருவொற்றியூரில் குறைந்தபட்சமாக 150 எனவும் பதிவாகியிருந்தது. அதாவது, கடந்த ஆண்டு "மிக மோசமான" நிலை இருந்த நிலையில், இந்த ஆண்டில் மாசு அளவு "மிதமான" அளவுக்கு வந்துள்ளது. அதிகாரிகள் இதற்கான காரணமாக, தீபாவளி நாளில் இடைஇடையே பெய்த மழை மற்றும் மிதமான காற்று ஓட்டம் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றனர்.
மழை தாக்கம்
மழையினால் பட்டாசுகளால் எழும் தூசி மற்றும் புகை தணிந்ததால், மாசு அளவு அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. மாநகராட்சி மற்றும் சுற்றுச் சூழல் துறைகள் இணைந்து சென்னையின் காற்று தரத்தை கண்காணித்து வருகின்றன. மாசு அளவு அதிகமான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் செல்லும் போது கவனம் செலுத்த வேண்டுமெனவும், தேவையற்ற பட்டாசு வெடிப்பை தவிர்க்க வேண்டுமெனவும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு, அறிவுறுத்தியுள்ளனர். மொத்தத்தில், இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தால் சென்னையில் காற்று மாசு உயர்ந்திருந்தாலும், கடந்த ஆண்டைவிட குறைவான அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இது பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் வானிலை காரணங்களால் ஏற்பட்ட சாதகமான அம்சம் என்கின்றனர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications