சோதனை ஓட்டம் சக்சஸ்.. சென்னை விமான நிலையத்தின் நீண்ட கால பிரச்சனைக்கு விரைவில் தீர்வு
சென்னை: சென்னை விமான நிலையத்தின் நீண்ட கால பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வரப்போகிறது.. அதிகப்படியான விமானங்கள் தினசரி வந்து செல்லும் நிலையில், புதிய முயற்சியாக விமான நிலையத்தின் 2 ஓடுபாதைகளிலும் ஒரே நேரத்தில் விமானங்களை இயக்கி நடத்தப்பட்ட சோதனை நடந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றிருப்பது உற்சாகத்தை அளித்துள்ளது,
இந்தியாவின் மற்ற பெரிய நகரங்களில் புறநகர் பகுதிகளில் அல்லது வெளியில் தான் விமான நிலையம் இருக்கும்.. ஆனால் சென்னையில் மையப்பகுதியில் விமான நிலையம் இருக்கும். ஒரு காலத்தில் புறநகர் பகுதியாக இருந்த மீனம்பாக்கம், கடந்த 25 வருடத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியால் சென்னையின் மையப்பகுதியாக மாறி உள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடியாத அளவிற்கு நிலைமை கைமீறி உள்ளது.

தற்போதைய நிலையில் பரந்தூரில் தான் விமான நிலையம் அமைக்க முடியும் என்கிற நிலைப்பாட்டிற்கு அரசு வந்துள்ளது. ஆனால் அந்த விமான நிலையம் சென்னையில் இருந்து 60 கிமீ தூரம் தள்ளி இருக்கிறது. அரசு 2001 முதல் 20010க்குள் புதிய விமான நிலையம் குறித்து முடிவு செய்திருந்தால், சென்னைக்கு மிகப்பெரிய வளர்ச்சியாக இருந்திருக்கும்.. ஆனால் துரதிஷ்டவசமாக தாமதம் ஏற்பட்டதால், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி போன்ற நகரங்களுடன் போட்டி போட முடியாத அளவிற்கு சிறிய விமான நிலையமாக சென்னை விமான நிலையம் இருக்கிறது.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இன்னும் சில ஆண்டுகள் வரை ஆகும் என்பதால், தற்போதைய நிலையில் மாற்று ஏற்பாடுகளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் யோசித்து வருகிறார்கள். அதன்படி அதிகப்படியான விமானங்கள் தினசரி வந்து செல்லும் நிலையில், புதிய முயற்சியாக விமான நிலையத்தின் 2 ஓடுபாதைகளிலும் ஒரே நேரத்தில் விமானங்களை இயக்கி சோதனை நடந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதால், அதிக விமானங்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும். அதை பற்றி கொஞ்சம் தெளிவாக பார்ப்போம்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்கவும், புறப்படவும் 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் ஓடுபாதை 3.66 கிலோ மீட்டர் தூரமும், 2-வது ஓடுபாதை 2.89 கிலோ மீட்டர் தூரமும் கொண்டது ஆகும். முதல் ஓடுபாதையில் பெரிய ரக விமானங்கள் வந்து தரை இறங்கி பின்னர் புறப்பட்டு செல்கின்றன. 2-வது ஓடுபாதையில் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதில் முதல் ஓடுபாதைதான் விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகைக்கு பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு தினசரி வரும் உள்நாடு மற்றும் பன்னாட்டு விமானங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. புதிய விமான நிலையம் அமைக்க காலதாமதம் ஏற்படும் என்பதால், தற்போதைய நிலை யில் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இயக்கத்தை துரிதப்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் புதிய முடிவெடுத்துள்ளது. அதன்படியே சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
சென்னை விமான நிலையத்தின் முதல் பிரதான முதல் ஓடுபாதையில் ஒரு மணி நேரத்தில் 30-க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்படுகிறது. 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும்போது 55-க்கும் அதிகமான விமானங்களை ஒரு மணி நேரத்தில் இயக்க முடியும். விமான சேவைகள் அதிகரிக்க இந்த முடிவு அவசியம் என்பதால் 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
இதற்காக விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்நிலயில் கடந்த சில தினங்களாக சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளிலும் ஒரே நேரத்தில் விமானங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும், இந்த மாத இறுதிக்குள் இதை நடைமுறைக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications