161 நாளுக்கு பின்.. சென்னை ஒருவழியாக இயல்புநிலைக்கு திரும்பியது..தற்போது எப்படி இருக்கிறது தெரியுமா?
சென்னை: சென்னையில் மீண்டும் மாநகர பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நிலவரம் எப்படி இருக்கிறது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்றில் இருந்து லாக்டவுன் தளர்வுகள் அமலுக்கு வருகிறது. இ - பாஸ், பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட தளர்வுகளுடன் தமிழகத்தில் லாக்டவுன் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகம் முழுக்க வழிபாட்டு தளங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

சென்னை எப்படி
சென்னையிலும் அதிகரிக்கும் கொரோனா கேஸ்களுக்கு இடையே லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னை இதனால் மீண்டும் உயிர்பெற்று இருக்கிறது என்று கூறலாம். சாலையில் பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளது. அரசு அலுவலகம் 100% பணியாளர்கள் உடன் இயங்குவதால், எல்லோருக்கும் பணிக்கு செல்ல தொடங்கினார்கள். இதனால் சாலையில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

கோவில்கள் எப்படி
அதிலும் சென்னையில் காலையில் கோவில்கள் திறக்கப்பட்டு, பூஜைகள் நடந்தது, தி நகர், வடபழனி உள்ளிட்ட பகுதியில் இருக்கும் பிரபல கோவில்கள் திறக்கப்பட்டு, வழிபாடு அனுமதிக்கப்பட்டது. கோவில்களுக்கு மக்கள் கூட்டமும் நினைத்ததை விட ஆகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக இடைவெளி விட்டு, மாஸ்க் அணிந்தபடி மக்கள் கோவில்களுக்கு சென்றார்கள் .

பேருந்துகள் எப்படி
சென்னையில் மாநகர பேருந்துகள் தற்போது இயங்க தொடங்கி உள்ளது. குறைந்த எண்ணிக்கையில்தான் தற்போது பேருந்துகள் இயங்குகிறது. மொத்தமாக போக்குவரத்து ஊழியர்கள் இன்னும் பணிக்கு திரும்பவில்லை. இதனால் பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்படவில்லை. அனைத்து வகையான ''போர்டு'' பேருந்துகளும் இயக்கப்படுகிறது. கடும் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயங்குகிறது.

சர்வீஸ் செய்யப்பட்டது
இதற்காக நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரை பேருந்துகள் சர்வீஸ் செய்யப்பட்டது. இத்தனை நாட்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பேருந்துகள் நேற்று சர்வீஸ் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகளில் மக்கள் கூட்டம் இருந்தது. 50% கூட்டம் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதற்கும் குறைவாகவே மக்கள் கூட்டம் பேருந்துகளில் காணப்படுகிறது.

161 நாட்கள் எப்படி
மக்களுக்கு பேருந்தில் செல்ல லேசான அச்சம் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் 161 நாட்களுக்கு பின் இப்படி பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் படிப்படியாகவே இயல்புநிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. வாகனங்கள் அதிக அளவில் சாலையில் காணப்படுகிறது.

மீண்டு வருகிறார்கள்
அதோடு நேற்று இரவில் இருந்து இ பாஸ் இல்லாத காரணத்தால் சென்னைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பலர் திரும்பி வந்துள்ளனர். அலுவலகங்களை 100% ஊழியர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டள்ளது. இதனால் பல்வேறு மாவட்ட மக்கள் மீண்டும் சென்னைக்கு வர தொடங்கி உள்ளனர். சென்னை கிட்டத்தட்ட கொரோனாவோடு தற்போது வாழபழகிக் கொண்டது என்றுதான் கூற வேண்டும். இந்தியாவின் முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 23.9% சரிந்த நிலையில்.. ஜிடிபியில் அதிக பங்கு வகிக்கும் சென்னையில் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications