நீங்க சென்னையில் இருக்கீங்களா.. கலெக்டர் திடீர்னு போட்ட உத்தரவு.. லேடீஸ் ஹாஸ்டல்களுக்கு பறந்த மேட்டர்
சென்னை: சென்னையில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகளையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சிறை தண்டனை விதிக்கபடும் என்றும் மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரை, வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், வாடகை எடுத்து தங்க முடியாதவர்கள், மகளிர் விடுதிகளை நாடுகிறார்கள். ஆனால், மகளிர் விடுதிகளை பொறுத்தவரை, முறையாக உரிமம் பெற்றிருக்க வேண்டும்.. இதுகுறித்து பல முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, தீயணைப்பு சான்றிதழ், சுகாதார சான்றிதழ், கட்டிட உறுதித்தன்மை சான்று மற்றும் பார்ம் டி உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும், விடுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் (குளியலறை மற்றும் உடைமாற்றும் அறைகளைத் தவிர), விடுதி காப்பாளர் கட்டாயம் பெண்ணாகவும், விடுதி பாதுகாவலர் ஆண் அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும், விடுதி பாதுகாவலர் போலீசாரால் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், இப்படி இன்னும் நிறைய விதிமுறைகள் உள்ளன.
அனுமதி: ஆனால், சில இடங்களில் இவைகளை முறையாக பின்பற்றுவதில்லை.. மேலும் புற்றீசல்போல நிறைய விடுதிகள் பெருகிவிட்டதால், பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடுகிறது. அதனால்தான் அரசு தரப்பில் கடிவாளம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், உள்ளதாவது:
விடுதிகள்: "சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற இணையதள ஆன்லைன் போர்ட்டல் மூலமாக பதிவு செய்யலாம். அதன்படி அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டிடம் / வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச் சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்டலில் வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அபராதம்: அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறையின் மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்படும்" என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications