சென்னை டூ தடா நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா! 8 நண்பர்கள் சென்ற காரில் ஒரு மாணவி பலி
சென்னை: சென்னையிலிருந்து தடா நீர்வீழ்ச்சிக்கு நண்பர்கள் 8 பேர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற 7 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் இருந்து தடா நீர்வீழ்ச்சிக்கு நண்பர்கள் 8 பேர் சேர்ந்து சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக ஒரு காரை ஏற்பாடு செய்து கொண்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்றனர்.

நீர் வீழ்ச்சிக்கு சென்றுக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென சாலையில் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. முன்பக்க கண்ணாடியெல்லாம் உடைந்து சுக்குநூறானது.
இந்த விபத்தில் சிக்கிய மாணவி ஒருவர் உயிரிழந்துவிட்டார். படுகாயமடைந்த மற்ற 7 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் யார், பெயர், ஊர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நீர் வீழ்ச்சி சென்னையிலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ளது. இதற்கு தடா அருவி என்றும் உப்பலமடுகு நீர் வீழச்சி என்றும் சொல்வதுண்டு. இது காம்பகம் காட்டுபகுதியில் உள்ளது.
இங்கு பசுமையான நீர்வீழ்ச்சிகள், சிறு குன்றுகள் இருப்பதால் மலையேற்றத்திற்கு ஏற்ற பகுதியாகும். இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். மேலும் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ பலர் செல்கிறார்கள்.
சென்னையிலிருந்து சூலூர்பேட்டை, நெல்லூர் போகும் ரயில்களும் பேருந்துகளும் தடா வழியாக செல்கின்றன. தடா ரயில் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் நீர் வீழ்ச்சிக்கு வந்தடையலாம். இந்த தடா நீர் வீழ்ச்சி அருகே தங்குமிடங்கள் இல்லாததால் காளஹஸ்தியில் அறை எடுத்து தங்கலாம்.












Click it and Unblock the Notifications