சென்னை காக்னிசண்ட் தலைமை அலுவலகம் விற்பனை.. ரூ.612 கோடிக்கு வாங்கியது யார் தெரியுமா? ?
சென்னை: இந்தியாவில் காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வந்தது. தற்போது அந்த அலுவலகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 12.68 ஏக்கரில் ஓஎம்ஆர் ரோட்டில் அமைந்து இருந்த இந்த அலுவலகத்தை பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ரூ.612 கோடிக்கு வாங்கி உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அதன்படி நம் நாட்டிலும் சென்னை, கோவை உள்பட பல இடங்களில் காக்னிசண்ட் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

நம் நாட்டில் காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் என்பது சென்னையில் தான் உள்ளது. சென்னை ஓஎம்ஆர் ரோட்டில் ஒக்கியத்தில் இந்த அலுவலகம் அமைந்து இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த அலுவலகம் தான் இந்தியாவுக்கான காக்னிசண்ட் தலைமை அலுவலகமாக
செயல்பட்டது.
சென்னையில் முதலில் காக்னிசண்ட் அலுவலகம் அமெரிக்க தூதரகத்திற்கு அருகே CSI கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வந்தது. அதன்பிறகு தான் துரைப்பாக்கத்துக்கு சொந்தமாக கட்டம் கட்டப்பட்டது. இந்த அலுவலகம் என்பது 13.68 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இதனை விற்பனை செய்ய சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் தான் தற்போது டீல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
சென்னை காக்னிசண்ட் தலைமை அலுவலகத்தை பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரியல் ஸ்டேட் நிறுவனம் வாங்கி உள்ளது. அதாவது பாகமனே கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனம் தான் சென்னை காக்னிசண்ட் தலைமை அலுவலகத்தை ரூ.612 கோடிக்கு வாங்கி உள்ளது.
இதற்கான பத்திரப்பதிவு என்பது கடந்த 12ம் தேதி நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த சொத்து கைமாறியதன் மூலம் அரசுக்கு ரூ.55.08 கோடி அளவுக்கு பத்திரம், பதிவு கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.
துரைப்பாக்கத்துக்கு பதிலாக காக்னிசண்ட் நிறுவனம் தாம்பரம் அருகே ஜிஎஸ்டி சாலையில் உள்ள மெப்ஸ் வளாகத்தில் தலைமை அலுவலகத்தை மாற்றம் செய்ய உள்ளது. காக்னிசண்ட்டுக்கு ஏற்கனவே மெப்ஸ், சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி உள்ளிட்ட இடங்களில் அலுவலகம் உள்ளன. இப்படியான சூழலில் தான் மெப்ஸில் தலைமை அலுவலகம் திறந்து அனைத்து பணிகளையும் அங்கு ஒருங்கிணைக்கப்படுகிறது.
காக்னிசண்ட்டின் இந்த முடிவின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் துரைப்பாக்கம் அலுவலகத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்து வருகிறது. இதனால் ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனால் அலுவலகத்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications