ஜஸ்ட் 30 நிமிஷம் தான்..டிக்கெட் விற்பனையிலும் ஸ்பீடு காட்டிய சென்னை கோவை வந்தே பாரத்..பயணிகள் ஆர்வம்
சென்னை: சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் நாளை முதல் பயணிகள் ரயில் சேவை நடைமுறைக்கு வருகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு, நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்தில் டிக்கெட்டுகள் காலியானது.
பயணிகளின் வசதிக்காக அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
பயண நேரத்தை பெரிதும் குறைப்பதோடு சொகுசு வசதிகளும் இருப்பதால் வந்தே பாரத் ரயில் சேவை பயணிகள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு நவம்பர் 11-ந்தேதி சென்னை - மைசூரு இடையில் 5-வது வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டது.
கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலாக சென்னை- கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் 'வந்தே பாரத்' ரயில் இதுதான் ஆகும். ஏற்கனவே சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டாலும் அது அண்டை மாநிலமான கர்நாடகா செல்கிறது. அதனால், தமிழகத்திற்குள் பயணிக்கும் முதல் வந்தே பாரத் ரயில் என்ற பெருமையை சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் பெற்றுள்ளது.

கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். அதேபோல், மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை இடையிலான 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.
செல்போன் செயலி மூலமாக
இரவு 8.15 மணிக்கு இந்த ரயில் கோவை சென்றடையும். வாரத்திற்கு ஆறு நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும். புதன்கிழமை மட்டும் இந்த ரயில் சேவை இருக்காது. நாளை முதல் பயணிகள் ரயில் சேவை நடைமுறைக்கு வருகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு, நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலமாக இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
முன்பதிவு தொடங்கியது முதலே டிக்கெட் விற்பனை படு வேகமாக இருந்தது. பயணிகள் வேக வேகமாக முன்பதிவு செய்ய தொடங்கினர். டிக்கெட் விற்பனை தொடங்கிய வெறும் 30 முதல் 40 நிமிடங்களுக்குள் டிக்கெட் அனைத்தும் முடிந்து விட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்தில் இந்த ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிக்கெட் கட்டணம்

சென்னையில் இருந்து 5 மணி 50 நிமிடங்களில் கோவைக்கு இந்த ரயில் மூலம் செல்ல முடியும். 8 பெட்டிகள் கொண்டதாக இயக்கப்படும் இந்த ரயிலில் 536 இருக்கைகள் உள்ளன. 450 இரண்டாம் நிலை இருக்கைகளும், 56 முதல்நிலை இருக்கைகளும் உள்ளது. பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக பிறகு அதிகரிக்கப்படலாம் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்த ரயிலில் AC Executive Chair Car வகுப்பில் டிக்கெட் கட்டணம் ரூ.2,310 ஆகவும், AC Chair Car கட்டணம் ரூ.1,215 ஆக வசூலிக்கப்பட்டு உள்ளது. உணவின்றி டிக்கெட் கட்டணம் AC Executive Chair Car இருக்கைக்கு ரூ.2,116 ஆகவும், AC Chair Car இருக்கைக்கு ரூ.1,057 ஆகவும் வசூலிக்கப்பட்டது. எனினும் காலியாக இருக்கும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் வேறுபடும்.












Click it and Unblock the Notifications