கடனில் தத்தளிக்கும் சென்னை மாநகராட்சி? மாத வட்டி மட்டும் ரூ.8.50 கோடி!
சென்னை: சென்னை மாநகராட்சியின் கடன் ரூ.1,488.50 கோடியாக இருப்பதாகவும், மாதம் தோறும் கடனுக்காக வட்டி மட்டும் ரூ.8.50 கோடி அளவுக்கு கட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநகராட்சி கூட்டத்தில், பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் எழுப்பிய கேள்விகளுக்கு மேயர் பிரியா மேற்குறிப்பிட்ட விவரங்களை வழங்கியுள்ளார்.

பிரியா கூறியதாவது, "பிப்ரவரி 1 ஆம் தேதி நிலவரப்படி, சென்னை மாநகராட்சியின் கடன் தொகை ரூ.3,065.67 கோடி. அதில் ரூ.1,577.18 கோடி செலுத்தப்பட்டுள்ளது. மீதம் ரூ.1,488.50 கோடி இருக்கிறது. இதற்காக வட்டி மட்டும் மாதம் ரூ.8.50 கோடி செலுத்தப்பட்டு வருகிறது. அசல் தொகை ஒவ்வொரு நிதியாண்டிலும் செலுத்தப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.
தவிர மாநகராட்சி கூட்டத்தில் மேலும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கழிப்பறைகளை தனியார் மூலம் பராமரிக்க ரூ.1,226 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
அதாவது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும், பொது-தனியார் கூட்டாண்மை மூலம் கழிப்பறைகளை கட்டி பராமரிக்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கோரப்பட்டிருக்கிறது. அதன்படி திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் உள்ள 285 பொது கழிப்பறைகளுக்கு ரூ.362.59 கோடிக்கும், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் உள்ள 395 கழிப்பறைகள் ரூ.468 கோடிக்கும் பராமரிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இது தவிர வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் உள்ள 322 கழிப்பறைகளுக்கு ரூ.395.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தமாக 1,002 கழிப்பறைகளை பராமரிக்க ரூ.1,226 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தவிர மெரினாவை தூய்மைப்படுத்த ஒரு ஆண்டுக்கு ரூ.7.09 கோடியும், பெசன்ட் நகர், திருாவன்மியூர் கடற்கரையை பராமரிக்க ரூ.4.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநகராட்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியும் ஒன்று. மாநகராட்சியை மேலும் விரிவுப்படுத்தவும், தூய்மைப்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சென்னையை தூய்மையாக வைத்திருப்பது மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது. சென்னையிலிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதனை மறுசுழற்சி செய்வதிலும், பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதிலும் மாநகராட்சி மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டிருக்கிறது. அதேபோல மணலி போன்ற பகுதிகளில் கழிவு நீர் இணைப்பை கொண்டு சேர்ப்பதும் சவாலாக மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications