தெருநாய்கள் தொல்லை.. இனி இல்லை! சென்னை மாநகராட்சி ‘ஸ்பெஷல்’ பிளான்.. ரெடியானது 3 பிரமாண்ட மையங்கள்
சென்னை: சென்னையில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனி ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு கருத்தடை செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக நாய்களுக்கென பிரத்யேக இனக்கட்டுப்பாட்டு மையம் சென்னை லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள நிலையில் அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரையும் திடீரென துரத்தி செல்வதால் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. பகலில் பள்ளி மாணவ மாணவிகள், குழந்தைகளைக் கடிப்பதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

தெரு நாய்கள் அட்டகாசம்: சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள் துரத்தியதில் ஏராளமானோர் வாகனங்களில் இருந்து கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குப்பைக் கழிவுகளை சாலையில் இழுத்து வந்து போட்டும், தெரு நாய்கள் அட்டகாசம் செய்து வருகின்றன.
நாய்களால் மக்கள் பீதியுடனே நடமாடும் சூழல் உள்ளது. தெரு நாய்களின் தொல்லை குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அரசு உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.

சென்னை மாநகராட்சி திட்டம்: இந்த நிலையில், சென்னையில் ஆண்டுக்கு 27,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம் தீட்டி உள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில், கண்ணம்மாபேட்டை, புளியந்தோப்பு, லாயிட்ஸ் ரோடு ஆகிய இடங்களில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெருநாய்களை பிடித்து, அதற்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ஆண்டுக்கு 24,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வந்த நிலையில் இனிமேல் ஆண்டு 27ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

நாய்களுக்கு கருத்தடை: சென்னை மாநகராட்சி பகுதியில் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, தற்போது தினமும் சராசரியாக 65 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 19,640 நாய்கள் பிடிக்கப்பட்டு 14,885 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே முதல் முறை: நாட்டிலேயே முதல் முறையாக நாய்களுக்கென பிரத்யேக இனக் கட்டுப்பாட்டு மையம் சென்னை விலங்குகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ளன. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த மையங்களில் தினமும் தலா 30 நாய்களுக்கு என ஆண்டுக்கு 9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் நாய் கருத்தடை சிகிச்சை ஆண்டுக்கு 27,000 ஆக அதிகரிக்கும்.
சென்னையில் 3 இடங்களில்: புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனைகளில் 100 நாய்களைப் பராமரிக்கும் வகையில் இடமும், 40 கூண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் நவீன அறுவை சிகிச்சை அரங்கம், தடுப்பூசி மையம், உயிரிழந்த செல்லப் பிராணிகளை எரியூட்ட தகன மேடை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications