ஜுன் 4 வரை சிறை தான்! செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு! அமலாக்கத்துறை வழக்கில் புது மனு
சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணை ஜுன் 4க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதோடு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலும் ஜுன் 4 வரை 36வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுகவில் இருந்து அமமுக சென்று திமுவில் இணைந்தார். செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கஸ்டடியில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அதன்பிறகு தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி தனது உடல்நலனை காரணம் காட்டி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை ஜாமீன் கோரினார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இதனால் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிறையிலேயே உள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. வழக்கு விசாரணை என்பது மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு கூடுதல் மனு செய்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் ஆவணங்கள் வழங்கப்பட்டது. கடந்த 25ம் தேதி நடந்த வாதத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ‛‛தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணம் மற்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் வித்தியாசம் உள்ளது. தேதி, மாதம் திருத்தப்பட்டுள்ளது. உண்மை கண்டறிய நிபுணர் குழு ஆய்வு அல்லது தடயவியல் துறை சோதனை மேற்கொள்ள வேண்டும்'' என கூறப்பட்டது.
இதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர், ‛‛ஆவணங்களில் திருத்தம் எதுவும் செய்யவில்லை. வேறுபாடுகள் இல்லை. ஒரிஜினல் ஆவணங்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளது. ஜெராக்ஸ் ஆவணங்கள் கருப்பு, வெள்ளையில் உள்ளன. இதுதான் வித்தியாசம்'' என வாதிட்டார். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 30-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதன்படி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மதியம் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணையை ஒத்திவைக்க செந்தில் பாலாஜி மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதாவது வங்கி சார்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்ப்பிக்கும் வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கூறப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனுவுக்கு அமலாக்கத்துறையிடம் பதில் கோரிய நீதிமன்றம் மனு மீதான விசாரணை ஜுன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. முன்னதாக புதிய மனுத்தாக்கலால் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
மேலும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்று முடிவடைகிறது. இதையடுத்து அவர் காணொலி காட்சி மூலம் சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அதன்பிறகு அவரது நீதிமன்ற காவலை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதன்படி ஜுன் 4ம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36வது முறையாக நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை நீதிபதி அல்லி பிறப்பித்தார்.
இதனால் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சுமார் 10 மாதங்களாக சிறையில் உள்ளார். இந்நிலையில் தான் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அவர் தாக்கல் செய்துள்ள வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் புதிய மனுவால் உத்தரவு ஜுன் 4ம் தேதிக்கு தள்ளிப்போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications