ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சை பாடல்.. இசைவாணிக்கு எதிராக அவதூறு பரப்பியவருக்கு ஜாமீன்
சென்னை: ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சை பாடல் பாடிய இசைவாணிக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவாமி ஐயப்பனை பற்றியும், ஐயப்பனை வழிபடும் பக்தர்களின் விரதம் குறித்தும், ஐயப்பனின் மகிமை குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பாடல் பாடியதாக கானா பாடகி இசைவாணிக்கு எதிரான சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது.

இது தொடர்பாக இசைவாணி அளித்த புகாரின் அடிப்படையில் ரவிச்சந்திரன், ஜோதிநாதன், அழகு பிரகாஷ்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கார்த்திக்கேயன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன், ஜோதிநாதன், அழகு பிரகாஷ்பதி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
எதிர்காலத்தில் சாதி ரீதியாகவோ, பெண்களுக்கு எதிராகவோ சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட மாட்டேன் என்று உத்தரவாத மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இசைவாணியின் பாடல் சர்ச்சையாக வெடித்தது. 'ஐயம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தா என்னப்பா?' என்கிற வரியில் இசைவானி சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் பாடியிருந்தார். இருப்பினும் கடந்த ஆண்டு திடீரென இந்த பாட்டு சர்ச்சையாக வெடித்தது. இந்து அமைப்புகளை சேர்ந்த பலர் இசைவாணியை கைது செய்ய வேண்டும், இந்து மதத்தை அவர் புண்படுத்திவிட்டார் என்று கூறி காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர்.
இயக்குநர் மோகன்ஜி, பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தியிருந்தனர். இதற்கிடையில்தான் இசைவாணி மீது சோஷியல் மீடியாக்களில் ஆபாச தாக்குதல்கள் அதிகரிக்க தொடங்கின. தன் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் இசைவாணி காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில்தான் அவதூறு பரப்பியதாக சிலரை போலீசார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications