மாயாவதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்து அவதூறு செய்தி! ஆங்கில நாளிதழ் ஆசிரியருக்கு சிறை
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட வழக்கில் தனியார் ஆங்கில நாளிதழ் ஆசிரியர் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்து செய்தி வெளியாகி இருந்தது

அதில், சென்னையில் உள்ள கேங்ஸ்டர்கள் பட்டியலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் இருப்பதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அப்போதைய ஆசிரியர் சுனில் நாயர், பத்திரிக்கையாளர் செல்வராஜ், வெளியீட்டாளர் நாராயணன் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி ஆனந்தன், எந்த ஒரு ஆதாரங்களும் இல்லாமலும் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த செய்தி வெளியிட்டுள்ளதாக வாதிட்டார்.
மேலும், இது தொடர்பாக தங்கள் தரப்பில் அனுப்பிய நோட்டீசுக்கும் அவர்கள் பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய 13 வது எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த செய்தி வெளியிட்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளதாக கூறி, 3 பேருக்கும் ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் 3 பேருக்கும் தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். பின்னர், தங்களுக்கு உடனடியாக ஜாமின் வழங்கக் கோரி மூன்று பேர் தாக்கல் செய்த மனுவையும் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 3 பேருக்கும் ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications